Jun 5, 2025 - 10:13 AM -
0
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சித்ர சேனாநாயக்கவுக்கு எதிராக சட்டமா அதிபர் அம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
2020ஆம் ஆண்டு இடம்பெற்ற லங்கா பிரீமியர் லீக் (LPL)போட்டியின் போது ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுவதற்காக கிரிக்கெட் வீரர் தரிந்து ரத்னாயக்கவைத் தூண்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விளையாட்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், இந்த நாட்டில் தேசிய அளவிலான கிரிக்கெட் வீரர் ஒருவர் மீது ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படுவது இதுவே முதல் முறை என்று சட்டமா அதிபர் திணைக்கள பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
தெற்காசியாவில் தேசிய அளவிலான கிரிக்கெட் வீரர் ஒருவர் மீது ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டின் பேரில் குற்றவியல் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுவது இதுவே முதல் முறை என்றும் அவர் குறிப்பிட்டார்.
2020 நவம்பர் 21 மற்றும் 22ஆம் திகதிக்கு இடையில் மொரிஷியஸ் மற்றும் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற கொழும்பு கிங்ஸ் அணிக்கான போட்டிகளை சூதாட்டத்திற்கு உட்படுத்த மற்றொரு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவை சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவுக்கு தெரிவிக்க வேண்டாம் என்று தரிந்து ரத்நாயக்கவிடம் கோரியதாகவும், அவரை ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட தூண்டியதோடு, அறிவுறுத்தல் வழங்கியதாகவும் விளையாட்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சச்சித்ர சேனநாயக்க மீது சட்டமா அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்தோடு, இதுவரையில் கைது செய்யப்படாத "சாயிட்" என்ற நபர் தரிந்து ரத்நாயக்கவை தொடர்பு கொண்டு "already spoke to the management. You will get games, and you have to give something for them too ok" என்று தெரிவித்ததை சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவுக்கு முறைப்பாடு அளிப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சச்சித்ர சேனாநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, அவர் மீது 2019 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க விளையாட்டு ஊழல் திருத்தச் சட்டத்தின் பிரிவு 5(d) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவின் (ACCU) அறிவுறுத்தலின் பேரில், சச்சித்ர சேனாநாயக்க சமீபத்தில் இலங்கை ஊழல் தடுப்புப் பிரிவால் (SAU) கைது செய்யப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக பெறப்பட்ட தடயவியல் சான்றுகள் மற்றும் பிற ஆதாரங்களை ஆய்வு செய்த பின்னர், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தனவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.