Jun 5, 2025 - 02:34 PM -
0
கடலோர ரயில்வே மார்க்கத்தில் சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் மிக அருகில் சென்று கொண்டிருந்ததாக இன்று (05) ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
இன்று காலை 9.45 மணியளவில், பாணந்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த (இல.328) கொண்ட ரயில், பாணந்துறைக்கும் மொரட்டுவைக்கும் இடையில் செல்வதற்கு சமிக்ஞை கோபுரத்திலிருந்து பச்சை சமிக்ஞையைப் பெற்றிருந்தது, ஆனால் மற்றொரு ரயில் ஏற்கனவே அதே திசையில் நகரத் தொடங்கியிருந்தது.
இது குறித்து வினவிய போது, கடலோரப் பாதையில் ளி சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டதாக ரயில்வே லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சம்பந்தப்பட்ட சமிக்ஞை கோளாறு பிரச்சினையை உடனடியாகத் தீர்க்க வேண்டும் என்று குறித்த சங்கம் எழுத்துப்பூர்வமாக ரயில்வே அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளது.
இந்தப் பிரச்சினை உடனடியாக தீர்க்கப்படாவிட்டால், பயணிகளின் பாதுகாப்பிற்காக கடலோரப் பாதையில் உள்ள ரயில்களை சேவையிலிருந்து விலக்கிக் கொள்ள நேரிடும் என்று ரயில்வே லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக ஜெயசுந்தரவிடம் கேட்டபோது, பாணந்துறைக்கும் மொரட்டுவைக்கும் இடையில் சமிக்ஞை கோளாறு இருப்பதாக தனக்குத் தகவல் கிடைத்ததாகக் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, தொடர்புடைய பிரச்சினையை சரிசெய்ய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக ரயில்வே பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.