Jun 5, 2025 - 03:52 PM -
0
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc Andre Franche மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான வதிவிட ஆலோசகர் Patrick McCarthy ஆகியோர் இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை அண்மையில் பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்து கொண்டார்.
ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி தொடர்பில் பத்தாவது பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்தும், இத்திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையுடன் ஒருங்கிணைப்புக்களை ஏற்படுத்திக் கொண்டு அவற்றை முன்னெடுப்பதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் இச்சந்திப்பில் பிரதானமாகக் கலந்துரையாடப்பட்டன.
பாராளுமன்ற பிரதிநிதிகள், உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகளின் மக்கள் பிரதிநிதிகள், ஆய்வாளர்களுக்காக பாராளுமன்றக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் ஒன்றை அமைப்பது தொடர்பிலும், பாராளுமன்றத்திற்குள் சட்டப் பிரிவு ஒன்றை உருவாக்குவது தொடர்பிலும் இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர் குறிப்பிட்டார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை, ஜனநாயகத்தை வலுப்படுத்துதல், இலஞ்சம், மோசடி மற்றும் ஊழல் இல்லாத அரசாங்கத்தை உருவாக்குதல் மற்றும் இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான புதிய அணுகுமுறைகளை பின்பற்றுதல் ஆகியவை குறித்தும் இங்கு மேலும் கலந்துரையாடப்பட்டது.
சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகத்தின் இலங்கை விஜயம் தொடர்பிலும், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ் சாபாநயகருக்கு விளக்கமளித்தார்.