Jun 7, 2025 - 09:38 PM -
0
போதைக்கு அடிமையானவர்களுக்கு சட்டவிரோதமாக வலி நிவாரண மருந்துகளை விற்பனை செய்யும் கும்பல் ஒன்றை சட்டத்தின் பிடியில் சிக்கவைப்பதற்கு அத தெரண உகுஸ்ஸ நிகழ்ச்சிக்கு வாய்ப்பு கிடைத்தது.
இன்றைய உகுஸ்ஸ நிகழ்ச்சியின் அம்பலப்படுத்தல் இது தொடர்பானதாகும்.
போதைக்கு அடிமையானவர்களுக்கு, நரம்பு நோய்களுக்கு பயன்படுத்தப்படும் வலி நிவாரண மருந்துகளை சட்டவிரோதமாக வழங்கும் இரண்டு மருந்தகங்கள் தொடர்பாக கோட்டை மற்றும் புறக்கோட்டை பொலிஸ் நிலையங்களுக்கு இரகசிய தகவல் கிடைத்திருந்தது.
அதன்படி, கோட்டை பொலிஸ் நிலையத்தின் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் மற்றும் அத தெரண உகுஸ்ஸ குழுவினருடன் இணைந்து அந்த இடங்களை ஆய்வு செய்யச் சென்றனர்.
முதலில் எமது குழு கொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் அமைந்துள்ள ஒரு மருந்தகத்திற்குள் நுழைந்தது.
அங்கு போதைக்கு அடிமையானவர்களுக்கு அதிக விலையில் அந்த வலி நிவாரண மருந்துகள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது.
அந்த மருந்தகத்திலிருந்து குறித்த மருந்தை வாங்கி வந்த ஒரு மதுப்பிரியர், பொலிஸ் அதிகாரிகளால் வழியிலேயே கைது செய்யப்பட்டார்.
அவர் வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில், அந்த மருந்தகம், மருந்து ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டது.
அப்போது, போதைக்கு அடிமையானவர்களுக்கு அந்த மருந்தகத்திற்குள் மருந்துகளை உட்கொள்ளவும் வசதி செய்யப்பட்டிருந்தது என்பது அம்பலமானது.
எந்தவொரு மருத்துவ பரிந்துரையும் இல்லாமல் அவை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் இதன்போது தெரியவந்தது.
மேலதிக விசாரணையில், அந்த மருந்தகத்தில் மருந்தாளர் ஒருவரும் இல்லை என்பதும் தெரியவந்தது.
இதற்கிடையில், புறக்கோட்டையில் உள்ள அரச மர சந்திக்கு அருகில் அமைந்துள்ள மற்றொரு மருந்தகத்திலும் இந்த வலி நிவாரண மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், விசாரணை அதிகாரிகள் அந்த இடத்திற்கும் சென்றனர்.
அங்கும், வழியில் காத்திருந்த பொலிஸ் அதிகாரிகள், அந்த இடத்திலிருந்து குறித்த மருந்துகளை வாங்கி வந்த ஒரு போதைக்கு அடிமையானவரை கைது செய்தனர்.
அந்த மருந்தகத்தில் மருந்துகளை விற்பனை செய்த நபரும் மருந்தாளர் இல்லை என்பதுடன், அதிகாரிகளின் கேள்விகளுக்கு முன்னால் அந்த நபர் பதிலளிக்க முடியாமல் திணறியதையும் காணமுடிந்தது.
குறித்த மருந்தகத்திலும் போதைக்கு அடிமையானவர்களுக்கு வலி நிவாரண மருந்துகளை உட்கொள்வதற்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
குறித்த இரு மருந்தகங்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மருந்து ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.