Jun 14, 2025 - 11:37 AM -
0
கஹதுடுவ, கிரிவத்துடுவ பிரதேசத்தில் கடந்த 30ஆம் திகதி 8 இலட்சம் ரூபா மதிப்புள்ள இரண்டு மாடுகளை திருடிய சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் நேற்று (13) கைது செய்யப்பட்டனர்.
கஹதுடுவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், கல்கிஸ்ஸ பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதன்படி, இந்த திருட்டில் ஈடுபட்ட ஒருவர், அதற்கு உதவிய ஒருவர் மற்றும் இவற்றை வைத்திருந்த ஒருவர் என மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் 23, 47 மற்றும் 59 வயதுடையவர்கள் என்றும், வத்தளை, ராகம மற்றும் மட்டக்குளிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் அதே நாளில் திருடப்பட்ட மாடுகளை கொன்று இறைச்சிக்காக விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இதேவேளை, கிரிவத்துடுவ பகுதியிலிருந்து வத்தளை மாபோல பகுதிக்கு மாடுகளை கொண்டுச்செல்ல பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் மாட்டிறைச்சியை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி ஒன்றும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் இன்று (14) கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.