Jun 16, 2025 - 05:17 PM -
0
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவை வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை ஓகஸ்ட் 4 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்று (16) நீதிபதிகள் எஸ். துரை ராஜா, மேனகா விஜேசுந்தர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நிர்மலன் விக்னேஸ்வரன், இந்த மனு தொடர்பாக அமைச்சரவையிடம் ஆலோசனை பெற்றுக்கொண்டு வாதங்களை முன்வைப்பதற்காக திகதியொன்றை வழங்குமாறு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தனக்கு இரண்டு வார கால அவகாசம் அளிக்கவும், ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய அனுமதி வழக்குமாறும் நீதிமன்றத்தைக் கோரினார்.
மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, பிரதிவாதிகள் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய அனுமதித்ததுடன், மனுதாரரின் சட்டத்தரணிகளுக்கு ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
அதன் பின்னர், மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கனிஷ்க விதாரண, நீதிமன்றத்தின் முன் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த மனுவின் உண்மைகளை உறுதிப்படுத்த ஒரு திகதியை வழங்குமாறு கோரினார்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அமர்வு, சமர்ப்பணங்களை உறுதிப்படுத்த ஓகஸ்ட் 4 ஆம் திகதி தொடர்புடைய மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டது.
இந்த மனுவை வைத்தியர் குணதாச அமரசேகர உள்ளிட்ட குழுவினர் சமர்ப்பித்திருந்தனர். பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை மற்றும் சட்டமா அதிபர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டிருந்தனர்.