Jun 27, 2025 - 08:35 AM -
0
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பிரிவால் நடத்தப்படும் வெளிவாரி பட்டப்படிப்பு கருத்தரங்குகள் மற்றும் பதிவு நடவடிக்கைகள் கடந்த 24ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்த பல்கலைக்கழக விரிவுரையாளரான வண. தம்பர அமில தேரர், தற்போதைய பிரச்சினைகளை விரைவாகத் தீர்த்து கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவித்தார்.
எனினும், வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க, அரசாங்கமும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுஞவும் தலையிட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
நேற்று (26) ஊடகங்களுக்கு பேட்டியளித்தபோது தேரர் இவ்வாறு கூறினார்.
பொது நிறுவனங்கள் குழு (COPE) சமீபத்தில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பாடநெறி ஆய்வுத் துறையில் நிதி முறைகேடுகள் இருப்பதை வெளிப்படுத்தியது.
சமீபத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் COPE குழுவின் முன் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த முறைகேடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில், பதில் தணிக்கையாளர் ஜெனரல் ஜி.எச்.டி. தர்மபால, வெளிவாரி பாடநெறி ஆய்வுத் துறையில் நடந்த நிதி முறைகேடுகள் காரணமாக மாணவர்கள் அனைத்துச் செலவுகளையும் ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.