Jan 23, 2026 - 07:32 PM -
0
மன்னாரிலிருந்து முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எலுவங்குளம் ஊடாக புத்தளத்திற்குச் செல்லும் பிரதான வீதியைத் திறக்கக் கோரி, ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இன்று (23) காலை மன்னார் பேருந்து நிலையத்தில் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் - எலுவங்குளம் ஊடாக புத்தளத்திற்கான பிரதான வீதியைத் திறப்பதற்கான ஏற்பாட்டுக் குழுவினால் இந்த நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த வீதியைத் திறந்து மக்களின் பாவனைக்கு விடுவிக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்தக் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதில் கலந்துகொண்டு கையெழுத்திட்ட மதத் தலைவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், "இவ்வீதி திறக்கப்படுவதன் மூலம் மன்னார் மாவட்ட மக்கள் மட்டுமன்றி, ஒட்டுமொத்த வட பகுதி மக்களும் நன்மையடைவார்கள்" என்று தெரிவித்தனர்.
மேலும், மன்னார் மாவட்ட மீனவர்கள் மட்டுமன்றி அனைத்துத் தரப்பினரும் தென்பகுதிக்கான போக்குவரத்தை இலகுவாக மேற்கொள்ளவும், தமது வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் இது வழிவகுக்கும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மன்னார் மாவட்ட மக்களிடம் சேகரிக்கப்படும் இந்தக் கையெழுத்துக்கள் அடங்கிய மகஜர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் மதத் தலைவர்கள், மீனவ அமைப்புகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு கையெழுத்திட்டு தமது ஆதரவை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
--

