Mar 8, 2026 - 03:36 PM -
0
கலைக்கப்படவுள்ள இலங்கை மின்சார சபைக்குப் பதிலாக புதிதாக நிறுவப்பட்டுள்ள 6 நிறுவனங்களில், 3 நிறுவனங்களுக்காகப் புதிய பொது முகாமையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, இலங்கை மின் உற்பத்தி (தனியார்) நிறுவனத்திற்கு பொறியியலாளர் என். ஜி. சாலிய பண்டிதரத்னவும், தேசிய மின் கடத்தல் கட்டமைப்பு சேவை வழங்குநர் (தனியார்) நிறுவனத்திற்கு பொறியியலாளர் என். எஸ். வெத்தசிங்கவும், மின் விநியோக இலங்கை (தனியார்) நிறுவனத்திற்கு பொறியியலாளர் கே. எஸ். ஐ. குமாரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நியமனங்கள் கடந்த 06 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும், மின்சார சபை ஊழியர் நிதிய (தனியார்) நிறுவனம் மற்றும் எனர்ஜி வென்ச்சர்ஸ் லங்கா (தனியார்) நிறுவனம் ஆகியவற்றுக்கு இதுவரை புதிய பொது முகாமையாளர்கள் நியமிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மின்சார சபையின் செயற்பாடுகள் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருவதால், அந்த சபையின் கீழ் ஊழியர்களால் நிறுவப்பட்டிருந்த அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று நள்ளிரவு முதல் ரத்தாகின்றன.
இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் புதிய புதிய நிறுவனங்களின் கீழ் மீண்டும் பதிவு செய்யப்பட்டு நிறுவப்பட வேண்டும்.
தற்போது மின்சார சபையிலுள்ள 40-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள், தமது புதிய நிறுவனங்களின் கீழ் புதிய தொழிற்சங்கங்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.