Mar 9, 2026 - 10:10 PM -
0
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக அதிகரித்து வருவதால், உள்நாட்டில் எரிபொருள் விலையை உயர்த்துவதை ஏப்ரல் பண்டிகைக் காலம் வரை தாமதிக்கத் தேவையில்லை என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இன்று (09) நடைபெற்ற 'அத தெரண Big Focus' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அந்தத் துறையின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க, இவ்வாறானதொரு பின்னணியில் எரிபொருள் விலை உயர்வை எதிர்கொள்ள அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
"உலக சந்தையில் எண்ணெய் விலைகள் அதிகரிப்பதை தெளிவாகக் காண முடிகிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பீப்பாய் பிரெண்ட் (Brent) வகை கச்சா எண்ணெயின் விலை 92 - 93 டொலர் மட்டத்திலிருந்தது. திங்கட்கிழமை சந்தை திறக்கப்பட்டவுடன் அது 115 டொலர் வரை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உலகளாவிய ரீதியிலும் உள்நாட்டிலும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரிப்பதுடன், எரிபொருளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரக் கட்டணமும் அதிகரிக்கக்கூடும்.
இதன்படி, இலங்கையில் 92 வகை பெட்ரோலின் விலை சுமார் 360 - 370 ரூபாய் வரை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதன் விளைவாக அனைத்துப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் உயரும். இதனால் ஒட்டுமொத்தமாக உலகிலும் இலங்கையிலும் அதிக பணவீக்க நிலைமையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உலக சந்தை விலைக்கு ஏற்ப உள்நாட்டு விலைகளையும் உயர்த்த வேண்டும் என ஏற்கனவே கொள்கை வகுப்பாளர்களால் முன்மொழியப்பட்டுள்ளது.
ஏப்ரல் பண்டிகைக் காலம் வரை இதனைத் தாமதிக்கத் தேவையில்லை என்றே நான் கருதுகிறேன். முடிந்தால் இதனை விரைவாகச் செய்ய வேண்டும். ஏனெனில், ஒரேடியாகப் பாரிய அழுத்தத்தைக் கொடுப்பதை விட, அந்த அழுத்தத்தைச் சீராகப் பரவச் செய்வதே சிறந்தது. அவ்வாறு செய்யாவிட்டால் உற்பத்தி நடவடிக்கைகள் முடங்கும் பாரிய ஆபத்து ஏற்படும்" என அவர் தெரிவித்தார்.
