May 22, 2026 - 11:55 PM -
0
விஞ்ஞானம், தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் இணைத் தலைமையில், கத்தோலிக்க சபையுடனான கலந்துரையாடல் நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்ட கத்தோலிக்க பாடசாலைகளின் நிர்வாகப் பிரச்சினைகள், கத்தோலிக்க மதக் கல்விக்கான ஆசிரியர் பணிக்குழாம் முறையொன்றை தயாரித்தல், ஆசிரியர் சேவைக்காக கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் மற்றும் அருட் தந்தைமாரை இணைத்துக்கொள்வதன் அவசியம், அத்துடன் அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்ட கத்தோலிக்க பாடசாலைகளின் நடவடிக்கைகளுக்காக கல்வி அமைச்சின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறையை உருவாக்குதல் ஆகிய விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.
கத்தோலிக்க சபையுடன் நடத்தப்படும் கலந்துரையாடல்களை ஆண்டுக்கு மூன்று முறை நடத்துவதற்கும், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, அதன் செயலாளராகச் செயற்படுவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்து தந்தமைக்காக கத்தோலிக்க சபை சார்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்திற்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
எந்தவொரு பாகுபாடுமின்றி அனைத்து மாணவர்களுக்கும் தத்தமது மதத்தைக் கற்றுக்கொள்வதற்கு உள்ள வாய்ப்பை உறுதிப்படுத்துவதே தனது எதிர்பார்ப்பு என்றும், கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அருட் தந்தை ஹெரல்ட் அட்டனி பெரேரா , அருட் தந்தை கிறிஸ்டி நோயல் இம்மானுவேல், அருட் தந்தை அன்டன் ரஞ்சித், அருட் தந்தை விமல் சிறி ஜயசூரிய உள்ளிட்ட கத்தோலிக்க சபையின் அருட்தந்தைமார், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட அந்த அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

