Header Logo

செய்திகள்
மெனிஞ்சைடிஸ் பரவல்: பாடசாலைகளுக்கு விசேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

May 29, 2026 - 05:14 PM -

0

மெனிஞ்சைடிஸ் பரவல்: பாடசாலைகளுக்கு விசேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

தற்போது சில மாவட்டங்களில் பரவி வரும் 'எண்டிரோவைரஸ் மெனிஞ்சைடிஸ்' (Enterovirus Meningitis) நோய் நிலைமையைக் கட்டுப்படுத்துவது குறித்து எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டுதல்களை, சுகாதார மற்றும் ஊடக அமைச்சுடன் இணைந்து கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் வழங்கியுள்ளது. 

இந்த நோய் முக்கியமாக சிறுவர்களையும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவானவர்களையும் அதிகமாகப் பாதிப்பதாக அந்த வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன், இந்நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் மாத்தறை மாவட்டத்தின் தெனியாய பகுதியில் கண்டறியப்பட்டிருந்தனர். 

மேலும், தற்போது நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களிலும் இந்நோய் பரவியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

தொற்றுநோயியல் மற்றும் சுற்றுச்சூழல் விசாரணைகளின்படி, ஆங்காங்கேயும் மற்றும் கொத்தணிகளாகவும் இந்நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும், இவர்களில் பாடசாலை மாணவர்களே அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனவே, இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பாடசாலைகளுக்கு விழிப்புணர்வூட்டுமாறு அறிவுறுத்தி இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

அந்த சுற்றறிக்கை பின்வருமாறு 

மெனிஞ்சைடிஸ் நோய் பரவலைத் தடுப்பதற்காக பாடசாலை அதிகாரிகளை விழிப்புணர்வூட்டல் 

தற்போது சில மாவட்டங்களில் பரவி வரும் எண்டிரோவைரஸ் மெனிஞ்சைடிஸ் (Enterovirus Meningitis) நோய் நிலைமையின் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சுக்குத் தெரியப்படுத்தியுள்ளது. 

வைரஸ் மெனிஞ்சைடிஸ் (மூளைக்காய்ச்சல் / மூளைச்சவ்வு அழற்சி) என்பது வைரஸ்களினால் ஏற்படும் ஒரு நோயாகும் என்பதுடன், அதற்கு எண்டிரோவைரஸ் ஒரு முக்கிய காரணமாகும். இந்த நோய் சிறுவர்களையும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவானவர்களையும் அதிகமாகப் பாதிக்கின்றது. 

எண்டிரோவைரஸ் மெனிஞ்சைடிஸ் நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மாத்தறை மாவட்டத்தின் தெனியாய பகுதியில் பதிவாகியிருந்ததுடன், தற்போது நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களிலும் இந்நோய் பரவியுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது. 

சுகாதார மற்றும் ஊடக அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட தொற்றுநோயியல் மற்றும் சுற்றுச்சூழல் விசாரணைகளின் மூலம், ஆங்காங்கேயும் மற்றும் கொத்தணிகளாகவும் இந்நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளதுடன், இவர்களில் பாடசாலை மாணவர்களே அதிகளவில் பதிவாகியுள்ளதாக இனம் காணப்பட்டுள்ளது. 

எனவே, இந்த வைரஸ் மேலும் பாடசாலை மாணவர்களிடையே பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது இன்றியமையாததாகும். சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவினால் எண்டிரோவைரஸ் மெனிஞ்சைடிஸ் நோய் பரவலைத் தடுப்பதற்காக பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பின்வரும் அறிவுறுத்தல்கள் குறித்து அனைத்து பாடசாலைகளையும் கல்வி நிறுவனங்களையும் விழிப்புணர்வூட்டுமாறு தயவுடன் கோரப்பட்டுள்ளது. 

நோய் பரவும் விதம் தூய்மையற்ற நீர், அசுத்தமான உணவு மற்றும் அழுக்கான கைகள் மூலம் வாய் வழியாகப் பரவும். சுவாசத் துளிகள் மற்றும் நோயுற்ற நபர்களுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணுவதன் மூலம் சுவாசப் பாதை வழியாகப் பரவும். 

நோயறிகுறிகள் திடீரென ஏற்படும் காய்ச்சலுடன் பின்வரும் மூளைச்சவ்வுத் தொற்று / அழற்சி அறிகுறிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை காணப்படலாம்: கழுத்து விறைப்பு (நெகிழ்வற்ற தன்மை) அமைதியற்ற தன்மை / அசௌகரியம் வலிப்பு / நடுக்கம் நினைவாற்றல் அல்லது சுயநினைவில் ஏற்படும் மாற்றங்கள் குறிப்பு: மேற்கூறிய அறிகுறிகளைக் கொண்ட மாணவர்களை மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்துவது அவசியமாகும். 

நோயைத் தடுத்தலும் கட்டுப்பாடும் சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல்; முக்கியமாக உணவு உண்பதற்கு முன்னரும், கழிவறையைப் பயன்படுத்திய பின்னரும் சோப்பு மற்றும் தண்ணீரிட்டு கைகளை நன்றாகக் கழுவுதல். சுத்தமான நீரை வழங்குதல் மற்றும் முறையான சுகாதார வசதிகளைப் பேணுதல். கழிவறைகள் மற்றும் அடிக்கடி தொடப்படும் மேற்பரப்புகளை (கதவுப் பிடிகள், குழாய்கள் போன்றவற்றை) தொடர்ந்து சுத்தமாக வைத்திருப்பதுடன், ஒரு நாளைக்குக் குறைந்தது 3 முதல் 5 தடவைகளாவது கிருமி நீக்கம் செய்தல். 

இருமல் அல்லது தும்மல் ஏற்படும் போது வாய் மற்றும் மூக்கை திசுத்தாள் (Tissue), கைக்குட்டை அல்லது முகக்கவசத்தினால் அல்லது முழங்கையை மடக்கி மறைத்தல். பயன்படுத்திய திசுத்தாள்களைப் பாதுகாப்பாக மூடியுள்ள குப்பைத்தொட்டிகளில் இடுதல் மற்றும் கைக்குட்டைகளைப் பாதுகாப்பாகச் சுத்தம் செய்தல். நோயறிகுறிகள் உள்ள நபர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணுவதைத் தவிர்த்தல். 

நோயறிகுறிகள் உள்ள மாணவர்களை முகக்கவசம் (Mask) அணிய ஊக்குவித்தல். வகுப்பறைகளில் போதிய காற்றோட்டத்தைப் பேணுதல் (இயன்றபோதெல்லாம் ஜன்னல்கள்/கதவுகளைத் திறந்து வைத்தல்). வகுப்பறைகள் மற்றும் உட்புறச் செயற்பாடுகளின் போது அதிக நெரிசலைத் தவிர்த்தல். 

விசேட பாடசாலைச் செயற்பாடுகளை நடத்தும் போது பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் தன்சல்கள் ஏற்பாடு செய்யும் போது, சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவினால் தயாரிக்கப்பட்டுள்ள "பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான தன்சல்" வழிகாட்டிக்கு இணங்கச் செயற்படுதல். 

பிரதேசத்தின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் (PHI) அல்லது சுகாதார மருத்துவ அதிகாரியை (MOH) தொடர்புகொள்ள நடவடிக்கை எடுத்தல். மாணவர்கள் அதிகளவில் ஒன்றுகூடும் செயற்பாடுகளில், நோயறிகுறிகள் உள்ள மாணவர்கள் கலந்துகொள்வதைத் தவிர்ப்பதற்காக மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டல். 

பாடசாலை உணவுத் திட்ட உணவு வழங்குநர்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் உணவைத் தயாரிப்பதற்கும் பரிமாறுவதற்கும் முன்னரும், கழிவறையைப் பயன்படுத்திய பின்னரும் கைகளை சோப்பிட்டு நன்றாகச் சுத்தம் செய்தல். உணவைத் தயாரிப்பதற்கும் கழுவுவதற்கும் பாதுகாப்பான மற்றும் சுத்தமான நீரைப் பயன்படுத்துதல். 

உணவைத் தயாரிப்பவர் ஒருவருக்கு நோயறிகுறிகள் தென்படுமாயின், அவரை உடனடியாக உணவைத் தயாரிக்கும் பணிகளில் இருந்து நீக்கி, கூடிய விரைவில் மருத்துவச் சிகிச்சைக்கு உட்படுத்தல். உணவைத் தயாரிப்பதற்கு முன்னர் உணவைத் தயாரிக்கும் இடங்கள், உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்களை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்தல். 

சமைத்த உணவு மற்றும் குடிநீரைச் சேமித்து வைப்பதற்கு நன்றாகச் சுத்தம் செய்யப்பட்ட, மூடப்பட்ட பாத்திரங்களைப் பயன்படுத்துதல். அதற்கமைய, பிரிவேனாக்கள் / பாடசாலைகளின் அன்றாடச் செயற்பாடுகளின் போதும் மேலதிகச் செயற்பாடுகளைத் திட்டமிடும் போதும் இந்த அறிவுறுத்தல்கள் குறித்து தீவிர கவனம் செலுத்துமாறு உங்கள் மாகாணத்திலுள்ள அனைத்து பிரிவேனாதிபதிகளையும் அதிபர்களையும் விழிப்புணர்வூட்டுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title