May 23, 2026 - 06:32 PM -
0
டிக்கோயா நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர், பொகவந்தலாவை - பெற்றசோ பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில், இன்று (23) மாலை 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபர், கடந்த 21ஆம் திகதி முதியவர் தம்பதியினரை கொலை செய்துவிட்டு தலைமறைவாகியிருந்தார்.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய, சம்பவ இடத்திற்குச் சென்ற பொகவந்தலாவை பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்தனர்.
பதுளைப் பகுதியைச் சேர்ந்த இந்தச் சந்தேகநபர், கொழும்புப் பகுதியில் பணிப்பெண்ணாகப் பணியாற்றும் கெம்பியன் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருடன் தொடர்பைப் பேணி வந்துள்ளார்.
குறித்த பெண்ணின் சகோதரர் வீட்டில் தங்கியிருந்த போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் தவிர, பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நீண்டகாலமாக வர்த்தகத்தில் ஈடுபட்டு, அண்மையில் கடையை மூடிவிட்டு அங்கேயே வசித்து வந்த 85 வயதுடைய எஸ். காளிமுத்து சத்திவேல் மற்றும் 82 வயதுடைய அவரது மனைவி சகுந்தலாதேவி ஆகியோரே இந்தக் கொடூரக் கொலைக்கு பலியாகியுள்ளனர்.
இவர்களது பிள்ளைகள் கொழும்புப் பகுதியில் வசித்து வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலைகாரன் தம்பதியினரிடமிருந்து 18 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் சம்பவம் நடந்த நாள் காலை முதலே டிக்கோயா பகுதியில் நடமாடியதுடன், நகைக்கடைகளுக்குச் சென்று வந்தமையும், கொலை நடந்த கடையை நோக்கிச் செல்லும் காட்சியும் சிசிடிவி கெமராவில் பதிவாகியிருந்தன.
சந்தேகநபர் தங்கியிருந்த இடத்திலிருந்து கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் குறித்து ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
--

