Jun 7, 2026 - 08:22 PM -
0
தமது மரணம் நெருங்கிவிட்டதாக உணர்வதால், கண்களைத் தானம் செய்வதற்கும் தமது இறுதி உயில் சாசனத்தைத் தயாரிப்பதற்கும் தேவையான ஆவணங்களை உடனடியாகக் கொண்டு வருமாறு சுரேஷ் சலே தெரிவித்துள்ளதாக அவரது சட்டத்தரணிகள் இன்று (07) வெளிப்படுத்தியுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள சலேயின் சட்டத்தரணி, தனது இறுதி உயிலை உருவாக்குவதற்குத் தேவையான ஆவணங்களைத் தயாரிப்பதற்காக, சட்டத்தரணிகள் உடனடியாகத் தன்னை வந்து சந்திக்குமாறு சலே தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த கடிதத்தின் மூலம் சலேயை வசதிகள் கொண்ட வைத்தியசாலை ஒன்றிற்கு மாற்றுமாறும், சுயாதீன மருத்துவக் குழுவொன்றின் மூலம் அவரது ஆரோக்கிய நிலையை ஆராயுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேயின் நலன் வேண்டி 'சர்வஜன அதிகாரம்' அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரித் பாராயண நிகழ்வு பெல்லன்வில ரஜமகா விகாரையில் இன்று மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் சுரேஷ் சலேயின் மனைவியும் மகனும் கலந்துகொண்டனர்.
அத்துடன், சுரேஷ் சலேவை மனிதாபிமானமற்ற முறையிலும் கொடூரமாகவும் நடத்தப்படுவதற்குக் எதிர்ப்புத் தெரிவித்து நாளை (08) காலை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு எதிர்க்கட்சியின் சில அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.
அதன்பின்னர், அவர் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் அந்த திணைக்களத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தனக்கு சித்திரவதை செய்வதாக கூறி சுரேஷ் சலே உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக வெளிப்படுத்தியிருந்தார்.
எனினும், நேற்று இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்ட பொலிஸார், உதய கம்மன்பிலவின் வௌிப்படுத்திய கருத்திற்கு மறுப்புத் தெரிவித்தனர்.
கம்மன்பில ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது குறிப்பிட்டது போல, அந்த சந்தேகநபருக்கு இலங்கை பொலிஸாரால் எந்தவொரு தாக்குதலோ அல்லது மனிதாபிமானமற்ற நடத்தையோ மேற்கொள்ளப்படவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், சுரேஷ் சலேயின் மனைவியான மனோரி சலே, பொலிஸ் மா அதிபருக்கு எழுத்துப்பூர்வமான முறைப்பாடு ஒன்றையும் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

