Jun 10, 2026 - 07:03 PM -
0
உள்நாட்டில் பொதியிடப்பட்ட அல்லது போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான (PET போத்தல்கள்) புதிய அதிகபட்ச சில்லறை விலைகளை நிர்ணயித்து நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் 20 (5) ஆம் பிரிவின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இந்த 96 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் (வர்த்தமானி இலக்கம்: 2492/29), இன்று (10) முதல் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் புதிய உத்தரவின்படி, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதல் விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்வதோ, விற்பனைக்காகக் காட்சிப்படுத்துவதோ அல்லது வழங்குவதோ எந்தவொரு உற்பத்தியாளர், பொதியிடுபவர், விநியோகஸ்தர் அல்லது வர்த்தகருக்கும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
புதிய விலைக் கட்டுப்பாட்டு உத்தரவின் மூலம், 2025 ஏப்ரல் 01 ஆம் திகதியிட்ட 2430/15 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருந்த பழைய விலைக் கட்டுப்பாட்டு உத்தரவு (இலக்கம் 93) ரத்தாவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் அதிகபட்ச சில்லறை விலைகள் பின்வருமாறு
500 மில்லி லீற்றர் முதல் 999 மில்லி லீற்றர் வரை ரூ. 80.00
1 லீற்றர் முதல் 1.499 லீற்றர் வரை ரூ. 120.00
1.5 லீற்றர் முதல் 1.999 லீற்றர் வரை ரூ. 150.0
02 லீற்றர் முதல் 2.499 லீற்றர் வரை ரூ. 180.0
05 லீற்றர் முதல் 6.999 லீற்றர் வரை ரூ. 400.00
இந்த உத்தரவுகளை மீறி அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களைக் கண்டறிவதற்காக, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனை அதிகாரிகளினால் நாடு தழுவிய ரீதியில் தீவிரக் கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

