Jun 10, 2026 - 10:31 PM -
0
அளுத்கம, டிப்போ வீதியில் அமைந்துள்ள ரயில் கடவையில் இன்று (10) மாலை இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மருதானையிலிருந்து ஹக்கடுவை நோக்கி பயணித்த அலுவலக அதிவேக ரயிலுடன், இந்த முச்சக்கரவண்டி மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், முச்சக்கரவண்டி தர்கா நகரிலிருந்து அளுத்கம நோக்கி பயணித்துள்ளதோடு, ரயில் கடவையை கவனக்குறைவாக கடக்க முயன்ற போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்து நடந்த போது முச்சக்கரவண்டியில் சாரதி மட்டுமே பயணித்துள்ளதோடு, உயிரிழந்த நபர் யார் என்பது குறித்த விபரங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

