Jun 12, 2026 - 11:02 AM -
0
கரைக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் செயற்படும் (லிட்டோரல்) சுயாதீன மாற்றுரு போர்க்கப்பலான யுஎஸ்எஸ் கன்பெரா (LCS 30) இன்று (12) கொழும்புத் துறைமுகத்திற்கு வருகைதந்துள்ளதென்பதை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறியத்தருகிறது.
யுஎஸ்எஸ் டல்ஸா, யுஎஸ்எஸ் சார்ள்ஸ்டன், யுஎஸ்எஸ் சான்டா பாப்ரா ஆகிய கப்பல்களைத் தொடர்ந்து கொழும்புத் துறைமுகத்திற்கு வருகைதரும் அமெரிக்க கடற்படையின் நான்காவது லிட்டோரல் வகை போர்க்கப்பலின் வருகையினை இவ்விஜயம் குறிப்பதுடன் இந்தோ - பசிபிக் பிராந்தியம் முழுவதும் பாதுகாப்பு, ஒத்துழைப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் கடல்சார் பங்காளர்கள் தமக்கிடையே தொடர்ச்சியான ஊடாட்டங்களைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தையும் இது எடுத்துக்காட்டுகிறது.
கொமான்டர் ஜேம்ஸ் மிக்லொஃப்லினின் தலைமையிலான யுஎஸ்எஸ் கன்பெரா, எரிபொருள் நிரப்புவதற்காகவும், தேவையான ஏனைய பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காகவும் ஒரு குறுகிய காலம் கொழும்பில் தரித்திருக்கும்.
யுஎஸ்எஸ் கன்பெரா (LCS 30) என்பது கரைக்கு அருகிலுள்ள கடற்பிராந்தியங்களில் செயற்படுவதற்காகவும், முன்னோக்கிய பிரசன்னம், கடல்சார் பாதுகாப்பு, கடல் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு உதவி செய்வதற்காகவும் வடிவமைக்கப்பட்ட ஒரு சுயாதீன திரிபுருவ லிட்டோரல் வகை போர்க்கப்பலாகும்.
2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் படைத்துறைப்பணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட இக்கப்பலானது, இந்தோ - பசிபிக் பிராந்தியம் முழுவதும் ஆற்றலுடைய, விரைந்து செயற்படும் இருப்பைப் பேணுவதற்கான அமெரிக்கக் கடற்படையின் உறுதிப்பாட்டினைப் பிரதிபலிக்கிறது.
அமெரிக்க மற்றும் இலங்கைக் கடற்படைகளுக்கிடையிலான நீண்டகால உறவுகளையும், எமது இருதரப்பு உறவின் வரைவிலணக்கமாக அமையும் நெருக்கமான ஒத்துழைப்பையும் இவ்விஜயம் பிரதிபலிக்கிறது. இந்தோ - பசிபிக் பிராந்தியம் முழுவதும் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய பங்காளரென்ற வகையில் இலங்கைக்கு ஆதரவளிப்பதில் அமெரிக்கா உறுதியாகவுள்ளது.

