Jun 17, 2026 - 12:29 PM -
0
அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அவர் ஆடை இன்றி நிர்வாணமாக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஒப்புக்கொண்டுள்ளதாக சுரேஷ் சலேயின் மனைவி மனோரி சலே தெரிவித்துள்ளார்.
இன்று (17) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை தற்போது மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
கேள்வி: தற்போது அவரது ஆரோக்கிய நிலை எவ்வாறு உள்ளது?
"சுரேஷ் தொடர்ந்து உண்பதோ, குடிப்பதோ இல்லை. அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடவில்லை. நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசமடைந்து வருகிறது. பேசுவதற்கும் சற்று சிரமப்படுகிறார். அவரால் தொடர்ந்து அமர்ந்திருக்க முடியாது. கைகளில் செலுத்தப்பட்டிருந்த ஊசிகள் காரணமாக கைகள் அனைத்தும் வீங்கியிருந்ததால், தற்போது அவற்றை அகற்றிவிட்டு வைத்தியர்கள் சிறு சிறு துளிகளாக திரவ ஆகாரங்களை வழங்கி வருகின்றனர். அதன் மூலமே வைத்தியர்கள் எப்படியோ அவரது உயிரைத் தக்கவைத்துள்ளனர்."
கேள்வி: நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் மற்றும் நீங்கள் அழைக்கப்பட்டிருந்ததை நாங்கள் அவதானித்தோம். அப்போது அங்கு என்ன நடந்தது? அவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டாரா?
"ஆம், நேற்று எங்கள் இரு தரப்பையும் அழைத்துப் பேசினார்கள். கடந்த முறை CID அதிகாரிகளால் வர முடியாமல் போனது, இந்த முறைதான் வந்திருந்தார்கள். முதன்முறையாக அவர்கள் ஒப்புக்கொண்டார்கள் – நாங்கள் கூறியது போலவே, சுரேஷைச் சிறை அறையிலிருந்து வெளியே அழைத்து வந்து, எல்லோர் முன்னிலையிலும் நிர்வாணப்படுத்தி சோதனை செய்ததை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். இவ்வளவு காலமாக அவர்கள் அதனை ஒப்புக்கொள்ளவில்லை, ஆனால் இப்போது அதனைச் செய்ததாக அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்."

