Jun 17, 2026 - 12:58 PM -
0
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்து வந்த சி.விஜயபாஸ்கர் நேற்று (16) தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரையும், சட்டசபை செயலாளர் சாந்தியையும் சந்தித்தார்.
அப்போது, விராலிமலை எம்.எல்.ஏ. பதவியை இராஜினாமா செய்வதாக தனது கைப்பட எழுதிய கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம், சி.விஜயபாஸ்கர் வழங்கினார்.
சி.விஜயபாஸ்கர் நேற்று இராஜினாமா செய்த நிலையில் விராலிமலை தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, த.வெ.க. ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததால் கடந்த மே மாதம் 13 ஆம் திகதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை அரசு நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டு இருந்தார்.
அதற்கான வாக்கெடுப்பு சட்டசபையில் நடந்தபோது, அ.தி.மு.க.வில் 2 பிரிவாக எம்.எல்.ஏ.க்கள் பிரிந்தனர். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 பேர் ஒரு பிரிவாகவும், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் 25 பேர் மற்றொரு பிரிவாகவும் பிரிந்தனர். 25 பேர் பிரிவில் முன்னாள் அமைச்சர் வைத்தியர் சி.விஜயபாஸ்கர் (விராலிமலை) இடம் பெற்றிருந்தார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை மீறி 25 பேரும் த.வெ.க. அரசுக்கு ஆதரவளித்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனு, ஆய்வில் இருந்தபோதே 25 பேர் பிரிவில் இருந்த இசக்கிசுப்பையா, சத்தியபாமா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார் ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை இராஜினாமா செய்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் வெற்றி பெற்றிருந்த 4 சட்டமன்ற தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் அ.தி.மு.க.வுக்குள் மாற்றம் ஏற்பட்டது. இராஜினாமா செய்த 4 பேர் தவிர மீதமுள்ள 21 பேரையும் (சி.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் உள்பட) அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளபடி மன்னித்துவிடலாம் என்று சபாநாயகரிடம் எடப்பாடி பழனிசாமி கடிதம் கொடுத்தார்.
அதை ஏற்றுக்கொண்டு, 21 பேர் மீதான மன்னிப்பும் ஏற்கப்படுவதாகவும், இராஜினாமா செய்துள்ள 4 பேர் மீதும் நடவடிக்கை தொடங்க இருப்பதாகவும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சமீபத்தில் அறிவித்தார். மேலும், அந்த 4 பேருக்கும் ஒரு வாரகால விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்து வந்த சி.விஜயபாஸ்கர் நேற்று எக்ஸ் தளத்தில், கட்சி தலைமைக்கு எதிரான தகவல்களை வெளியிட்டு இருந்தார். பின்னர் அவர் பிற்பகல் தலைமைச்செயலகத்திற்கு வந்தார். அங்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரையும், சட்டசபை செயலாளர் சாந்தியையும் சந்தித்து பேசினார்.
பின்பு, விராலிமலை எம்.எல்.ஏ. பதவியை இராஜினாமா செய்வதாக தனது கைப்பட எழுதிய கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம், சி.விஜயபாஸ்கர் வழங்கினார்.
அதன் பின்னர் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், 'சட்டமன்ற விதி 21 இன் அடிப்படையில், விராலிமலை எம்.எல்.ஏ. டாக்டர் சி.விஜயபாஸ்கர் தனது பதவி விலகல் கடிதத்தை தம் கைப்பட எழுதி என்னிடம் அளித்துள்ளார். அவர் அளித்த பதவி விலகல் கடிதம், சட்டசபை விதி 22 இன்படி முறையாக இருப்பதால் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
சி.விஜயபாஸ்கர் நேற்று ராஜினாமா செய்த நிலையில் விராலிமலை தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி உட்பட அதிமுக எம்எல்ஏக்கள் 5 பேரின் இராஜினாமாவால் மொத்தமாக 6 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

