Jun 17, 2026 - 03:15 PM -
0
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவைக் தற்போதைய கட்டத்தில் கைது செய்வதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்ததை அடுத்து, அவரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனு மீதான விசாரணைகளை நிறைவு செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி வருண ஜயசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சஷி மகேந்திரன் மற்றும் ஆதித்ய படபெந்திகே ஆகியோரடங்கிய நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் இன்று (17) எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுதாரரான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவை வேறு ஒரு பகுதிக்கு இடமாற்றம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பரிசீலிக்குமாறு நீதிமன்றம் முன்னதாக சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டிருந்ததாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், பொலிஸ் மா அதிபர் இது தொடர்பான பரிந்துரைகளை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக நீதியரசர்கள் ஆயத்திற்கு அறிவித்தார்.
இதற்கமைய, மனுதாரரை தற்போதைய கட்டத்தில் கைது செய்வதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு உறுதியளித்ததை அடுத்து, இந்த மனு தொடர்பான மேலதிக விசாரணைகளை நிறுத்துவதற்கு நீதியரசர்கள் ஆயம் உத்தரவிட்டது.

