Jun 17, 2026 - 03:40 PM -
0
வெங்கட் பிரபுவை இயக்குநராகவும் நடிகராகவும் தெரியும், ஆனால் அவர் பாடகராகவும் பல ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார். அதில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் அவர் பாடிய பாடல் பற்றி பார்க்கலாம்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் கடைசியாக விஜய் நடித்த கோட் திரைப்படத்தை இயக்கி இருந்தார். அப்படம் கடந்த 2024 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. கோட் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி அமைக்க இருந்தார் வெங்கட் பிரபு.
அப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென அப்படத்தில் இருந்து சிவகார்த்திகேயன் விலகிவிட்டார். இதனால் வேறு சில ஹீரோக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் வெங்கட் பிரபு.
இயக்குநர் வெங்கட் பிரபு படம் இயக்குவதை தாண்டி, நடிகராகவும் சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அவர் சிறந்த பாடகர் என்பது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சிறுவயதில் இருந்தே பாடல்கள் பாடி வருகிறார் வெங்கட் பிரபு. குறிப்பாக இளையராஜா இசையமைத்த அஞ்சலி திரைப்படத்தில் இடம்பெறும் குழந்தைகள் வாய்ஸில் வெங்கட் பிரபுவின் வாய்ஸும் ஒன்று. அப்படத்தில் 5 பாடல்களை கோரஸ் பாடி இருந்தார் வெங்கட் பிரபு. இதையடுத்து கார்த்திக் ராஜா இசையில் அலெக்சாண்டர், உல்லாசம் போன்ற படங்களில் பாடினார்.
பின்னர் யுவன் சங்கர் ராஜா இசையில் துள்ளுவதோ இளமை படத்தில் இடம்பெற்ற நெருப்பு கூத்தடிக்குது பாடலை பாடி இருந்தார் வெங்கட் பிரபு. இதுதவிர மணிசர்மா, பிரேம்ஜி, கங்கை அமரன் ஆகியோர் இசையிலும் பாடிய வெங்கட் பிரபு, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையிலும் ஒரே ஒரு பாடலை பாடி இருக்கிறார். அப்பாடலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அந்த பாடலை எஸ்.பி.பி.சரண் மற்றும் சின்மயி ஆகியோருடன் இணைந்து பாடி இருந்தார் வெங்கட் பிரபு. அந்தப் பாடல் என்ன என்பதை பற்றி தான் பார்க்க உள்ளோம்.
அது வேறெதுவுமில்லை எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஒரு நண்பன் இருந்தால்’ என்கிற பாடலை தான் வெங்கட் பிரபு பாடி இருந்தார். இப்பாடல் வெளியாகி 23 ஆண்டுகள் ஆனாலும், இன்றளவும் கல்லூரி ஃபேர்வெல் நிகழ்ச்சிகளில் தவிர்க்க முடியாத பாடலாக அது அமைந்துள்ளது. அப்பாடலுக்கு பின் ஏ.ஆர்.ரகுமான் இசையில் அவர் வேறெந்த பாடலும் பாடவில்லை. இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் இசையில் வெங்கட் பிரபு பாடி இருப்பதை பலரும் ஆச்சர்யமாக பார்க்கின்றனர்.

