Jun 20, 2026 - 09:20 PM -
0
வீதிப் போக்குவரத்துச் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 33-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் சாய்ந்தமருது பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றைச் செலுத்தியவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நகரப் பகுதி மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று (20) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டன.
வாகனப் பதிவு ஆவணங்கள் மற்றும் காப்புறுதி (Insurance) இன்றி மோட்டார் சைக்கிள்களைச் செலுத்தியமை, சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை மற்றும் தலைக்கவசம் அணியாது பயணித்தமை, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கும் மேற்பட்டவர்கள் பயணித்தமை மற்றும் அதிவேகமாகச் சென்றமை மற்றும் அதிக ஒலியெழுப்பும் வகையில் மோட்டார் சைக்கிள்களை மாற்றியமைத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சான்றுப் பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காகப் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன.
அத்துடன், பிடிபட்ட வாகன உரிமையாளர்களுக்குப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் கடுமையான எச்சரிக்கைகளும் அறிவுரைகளும் வழங்கப்பட்டன.
கிழக்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (சட்டத்தரணி) வருண ஜயசுந்தரவின் உத்தரவின் பேரில், அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் பணிப்புரைக்கு அமைவாக இச்சோதனை நடத்தப்பட்டது.
அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சியின் நெறிப்படுத்தலில், கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் பொலிஸ் பரிசோதகருமான டி.எஸ். இந்திக தலைமையில் இந்த விசேட சுற்றிவளைப்புப் பணி முன்னெடுக்கப்பட்டது.
இவ்விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் பல்வேறு பிரிவுகளையும் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
--

