Jul 27, 2026 - 01:14 PM -
0
ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் பார்த்தவருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, தனது கடைசிப்படம் என முதலமைச்சர் விஜய் அறிவித்து, நடித்த ஜனநாயகன் படம், கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கைக் குழுவின் மறு ஆய்வு குழுவின் ஆய்வில் படம் இருந்த நிலையில், ஏப்ரல் 3 ஆம் திகதி சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியானது.
பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவுசெய்யப்பட்ட வழக்கை சென்னை சைபர் கிரைம் பிரிவு பொலிஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த எறகுண்டப்பட்டியை சேர்ந்த ஆர்.பிரதீப்குமார் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி பிரதீப்குமார் தாக்கல் செய்த மனு நீதிபதி சி.குமரப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில், ஜனநாயகன் படம் திருட்டுத்தனமாக வெளியான போது பதிவு செய்யப்பட்ட பிரதான வழக்கில் அந்தப் படத்தை பார்த்தார் என்ற காரணத்திற்காக மட்டும் மனுதாரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. படம் கசிந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டபோது சாட்சியாக இருந்த மனுதாரர் மீதே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதலாவது குற்றம்சாட்டப்பட்ட நபர் அந்த குற்றச்சாட்டிலிருந்தே விடுவிக்கப்பட்டுவிட்டார். விசாரணை முடிந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்ட நிலையில், மேற்கொண்டு காவலில் வைத்து விசாரிக்க அவசியம் இல்லை. குற்றம்சாட்டப்பட்ட மற்ற சிலரும் ஜாமின், முன் ஜாமின் பெற்றுள்ளனர். எனவே,மனுதாரருக்கு முன் ஜாமின் வழங்க வேண்டுமென் வாதிடப்பட்டது.
பொலிஸ் தரப்பில், "படம் கசிந்த விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட 8 முதல் 21 வரையிலான குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். விசாரணை நீதிமன்றத்தில் ஆரம்பகட்ட குற்றப்பத்திரிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுதாரரரை கைது செய்து விசாரிக்காவிட்டால், படம் கசிவு தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும். படத்தின் சட்டவிரோத வெளியீட்டு அதிகம்பேர் பார்த்து, படக்குழுவினருக்கு கணிசமான இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். மனுதாரரும் இந்த வழக்கில் முக்கிய குற்றம்சாட்டப்பட்ட நபர் என்பதால், அவரது முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குமரப்பன், "வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் சிலர் ஏற்கனவே சட்டப்படியான ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒருவர் கைது செய்யப்பட்டபோது பொலிஸார் தரப்பு சாட்சியாக மனுதாரர் இருந்ததிலிருந்தே அவர் விசாரணைக்கு ஒத்துழைத்துள்ளார் என்பது தெரியவருகிறது. எனவே, அவருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்குகிறேன்" என்று உத்தரவிட்டுள்ளார்.
