Aug 3, 2026 - 11:54 PM
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்காக விடுக்கப்பட்டுள்ள இந்த அறிவித்தல் இன்று (03) இரவு 8.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், நாளை (04) இரவு 8.00 மணி வரை செல்லுபடியாகும்.
குறிப்பிட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது.
இதன்காரணமாக மறு அறிவித்தல் வரும் வரை குறித்த கடற்பரப்புகளில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென கடற்சார் மற்றும் மீனவ சமூகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, புத்தளம் முதல் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அப்பகுதிகளும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, குறித்த கடற்பரப்புகளில் கடற்றொழில் மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் செயற்படுமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால அறிவித்தல்கள் குறித்து அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

