Aug 4, 2026 - 03:42 PM
நுவரெலியா கிரகறி வாவியின் அணைகளின் நீர்மட்டம் அதிகமானதால் கடந்த 02 ஆம் திகதி நள்ளிரவு முதல் வெள்ளம் ஏற்படும் அபாயம் காரணமாக பாதுகாப்பு கருதி கிரகறி வாவியின் வான்கதவு திறக்கப்பட்டு பெருமளவு நீர் தொடர்ச்சியாக வெளியேற்றப்படுகிறது.
நுவரெலியா மாவட்டத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் தொடர் மழையினால் நுவரெலியா கிரகறி வாவியின் அணைக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்தமை காரணமாக நுவரெலியா நகரில் வெள்ளம் ஏற்படாமல் தடுக்கவும், அணையின் பாதுகாப்பைக் கருதி, நிர்ணயிக்கப்பட்ட கொள்ளளவுக்கு மேல் நீர் நிரம்பியதால் குறித்த வான் கதவு திறக்கப்பட்டு தொடர்ச்சியாக நீர் வெளியேற்றப்படுகிறது.
கடந்த 02 ஆம் திகதி இரவு நுவரெலியா சென்/அன்றுஸ் மற்றும் ரேஸ்கோர்ஸ் கிராமத்தில் சிறு வெள்ளம் ஏற்பட்டு பல குடும்பங்களைச் சேர்ந்த பொது மக்கள் இரண்டு தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியாவில் தற்போதும் நிலவும் சிறிய மழை, காற்று மற்றும் அடர்ந்த பனி மூட்டம் காரணமாக நுவரெலியா கிரகறி வாவியில் படகு சவாரிக்கு அனுமதி நிறுத்தப்பட்டுள்ளது, எவ்வாறாயினும் நுவரெலியாவில் மழை குறைந்த பின் படகுகளில் செல்ல வழக்கம்போல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கபடுவார்கள் என பொறுப்பான அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக நுவரெலியாவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியாவில் மழையுடன் கூடிய வானிலை நிலவிவருகின்றது அத்துடன், கடும் அடர்ந்த பனிமூட்டமும் நிலவுகின்றது. இதனால் பிரதான வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் அறிவிறுத்தியுள்ளனர் மேலும் வாகனங்களின் முன் விளக்குகளை ஒளிரச்செய்யுமாறு கோரப்பட்டுள்ளனர்.
அதேநேரத்தில் நுவரெலியா, கந்தப்பளை, இராகலை, நானு ஓயா, டொப்பாஸ் போன்ற பிரதேசங்களில் பனி மூட்டம் கடந்த இரண்டு தினங்களாக கலை மற்றும் மாலை வேளையில் வழமைக்கு மாறாக அதிகரித்து காணப்படுகின்றது.
நுவரெலியா - பதுளை பிரதான வீதி, நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் மற்றும் நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் டொப்பாஸ் தொடக்கம் லபுக்கலை பிரதேசம் வரை கடும் பனி மூட்டம் காணப்படுகின்றன. இதனால் அவ் வீதியில் மிக அவதானத்துடன் வாகனம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

