Aug 4, 2026 - 06:14 PM
களனி மற்றும் களு கங்கையின் தாழ் நிலப்பகுதிகளுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை திரும்பப் பெற நீர்ப்பாசனத் திணைக்களம் இன்று (04) நடவடிக்கை எடுத்துள்ளது.
நேற்று (03) பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல் 2.00 மணிக்கு களு கங்கையை ஒட்டி சிறிய வெள்ள அபாயமும், பிற்பகல் 3.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி சிறிய வெள்ள அபாயமும் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
எனினும், தற்போது ஆறுகளின் நீர்மட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதால், இந்த எச்சரிக்கை அறிவிப்பை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள மழைவீழ்ச்சி நிலைமையின் மாற்றங்கள் மற்றும் ஆறுகளின் நீர்மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தொடர்ந்து அவதானித்து வருவதாகவும், வெள்ள அபாயம் ஏதேனும் ஏற்பட்டால் அது குறித்து முன்அறிவிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

