Aug 5, 2026 - 10:55 AM
ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – கண்டி பிரதான வீதிகளில் சுமார் ஒன்பது மணி நேரமாகத் தடைபட்டிருந்த போக்குவரத்து இன்று (05) அதிகாலை 6.30 மணியளவில் மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டது.
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை பகுதியில் நேற்று (04) இரவு ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, அதே இடத்தில் மீண்டும் மண் சரிந்ததால் நேற்று இரவு 9.30 மணி முதல் இரண்டு பிரதான வீதிகளிலும் அனைத்து வகையான வாகனப் போக்குவரத்தும் முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழையால் மலைச்சரிவிலிருந்து பெருமளவு மண் மற்றும் கற்கள் வீதியில் சரிந்ததால், அவற்றை அகற்றும் பணிகளில் பெரும் சிரமம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் இயந்திரங்கள், பணியாளர்கள் மற்றும் ஹட்டன் பொலிஸார் இணைந்து இரவு முழுவதும் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டனர். கடும் முயற்சிகளுக்குப் பின்னர் இன்று அதிகாலை 6.30 மணியளவில் வீதியில் தேங்கியிருந்த மண் அகற்றப்பட்டு, ஒருவழிப் போக்குவரத்து மீண்டும் அனுமதிக்கப்பட்டது.
எனினும், மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் மண் தொடர்ந்து சரிந்து கொண்டிருப்பதால், எந்த நேரத்திலும் மீண்டும் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடிய அபாயம் நிலவுவதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும், தொடர்ச்சியான மழை காரணமாக ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – கண்டி பிரதான வீதிகளின் பல இடங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதால், இந்த வீதிகளைப் பயன்படுத்தும் அனைத்து வாகனச் சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தப் போக்குவரத்துத் தடை காரணமாக பணிக்குச் செல்ல முயன்ற அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நோயாளிகள் உட்படப் பொதுமக்கள் பல மணி நேரம் சிக்கித் தவித்ததுடன், பல்வேறு அசௌகரியங்களுக்கும் ஆளாகினர்.
மத்திய மலைநாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகத் தொடர்ச்சியாகக் கனமழை பெய்து வருவதால், மலைச்சரிவுகள் மற்றும் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, மலைப்பகுதிப் பிரதான வீதிகளில் பயணிக்கும் வாகனச் சாரதிகள் வானிலை அறிவிப்புகளைக் கவனத்தில் கொண்டு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி மிகவும் அவதானமாகப் பயணிக்குமாறு அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.























