Aug 5, 2026 - 07:26 PM
பொதுத் திறைசேரிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை சைபர் குற்றவாளிகள் திருடிய சம்பவம் தொடர்பாக இதுவரை 91 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
விசாரணைகளின் முன்னேற்றம் குறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சர், பொதுத் திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களம், அரச கடன் முகாமைத்துவ அலுவலகம் மற்றும் மத்திய வங்கி ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகளிடம் இவ்வாறு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இச்சம்பவம் தொடர்பாக நிதி அமைச்சுக்கோ அல்லது மத்திய வங்கிக்கோ குற்றம் சாட்ட முடியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
விசாரணைகளுக்குத் தேவையான வங்கி கணக்கு விபரங்கள் மற்றும் டிஜிட்டல் சான்றுகளைப் பெற்றுக்கொள்வதற்காக 'MLA' நடைமுறையின் கீழ் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஐக்கிய அரபு இராச்சியம், சுவிட்சர்லாந்து மற்றும் சாம்பியா ஆகிய நாடுகளிடம் தகவல்கள் கோரப்பட்டுள்ளன.
டிஜிட்டல் தரவுகளைப் பாதுகாப்பதற்காக 24/7 நடைமுறையின் கீழ் சர்வதேச உதவியும் கோரப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்காக சர்வதேச பொலிஸ் மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் இணைந்து செயற்படுவதாகவும் அவர் கூறினார்.
தற்போது பொதுத் திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் 'Server' கணினியில் உள்ள தரவுகள் பாதுகாக்கப்பட்டுள்ளதுடன், அத்தரவுகளைப் பிரதிசெய்து விசேட ஆய்வுக்கு உட்படுத்தி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

