Aug 5, 2026 - 09:37 PM
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தலைமையிலான தூதுக்குழுவினர் இன்று (05) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் கல்வித் துறையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
கல்வித் துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம், டிஜிட்டல் கல்வியை ஊக்குவித்தல் மற்றும் அனைவருக்கும் தரமான கல்வியை வழங்குவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதமர் இதன்போது தெளிவுபடுத்தினார்.
மேலும், இருநாடுகளின் உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான உறவுகளை மேலும் வளர்த்தெடுத்தல், மாணவர் பரிமாற்ற வேலைத்திட்டங்களை விரிவுபடுத்துதல், கூட்டு ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல் மற்றும் கல்வி ரீதியான ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாகவும் இரு தரப்பினருக்கும் இடையே சுமுகமான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் சுட்டிக்காட்டினர்.
பரஸ்பர நன்மைகளைப் பெற்றுக்கொண்டு சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கும், இரு நாட்டு மக்களுக்கிடையிலான உறவுகளை மேலும் உறுதிப்படுத்துவதற்குமான வாய்ப்புகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

