Header Logo
செய்திகள்
கிரிக்கெட் வீரர்களுக்கு வரி அறவீடு - மனு மீதான தீர்ப்புக்கு திகதி நிர்ணயம்

Aug 5, 2026 - 10:35 PM

கிரிக்கெட் வீரர்களுக்கு வரி அறவீடு - மனு மீதான தீர்ப்புக்கு திகதி நிர்ணயம்
Mobitel inner

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வீர, வீராங்கனைகளிடம் வரி அறவிடுவதற்கு உள்நாட்டு வருமானத் திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு, அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உள்நாட்டு வருமானத் திருத்தச் சட்ட மூலத்திற்கு அமைய தீர்வைக் காண முடியுமா என்பது குறித்து தெளிவுபடுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (5) உள்நாட்டு வருமானத் திணைக்களத்திடம் கோரியுள்ளது. 

தங்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழியர்களாகக் கருதி, தனிப்பட்ட முன்பண வரியை (APIT) அறவிடுவதற்கு உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் எடுத்த தீர்மானத்தை வலுவிலக்கச் செய்யும் பேராணை ஒன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, இலங்கை ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தலைவர்களான தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்க மற்றும் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் சிலரால் தாக்கல் செய்யப்பட்ட மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதியரசர்கள் குழாம் இதனைத் தெரிவித்தது. 

இந்த இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதியரசர் ரோஹான்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது, அண்மையில் உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தத்திற்கு அமைய, சுயாதீன சேவை வழங்குநர்கள் தனியாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு வகைப்படுத்தப்பட்ட தரப்பினருக்குத் தனிப்பட்ட முன்பண வரி பொருந்தாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. 

இந்தச் சூழ்நிலையில், மனுதாரர்களின் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள முடியுமா என உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் சார்பில் ஆஜரான பிரதிச் சொலிசிட்டர் ஜெனரல் மனோஹர ஜயசிங்கவிடம் நீதியரசர் குழாம் வினவியது. 

அதற்கமைய, குறித்த திருத்தத்தை இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பயன்படுத்த முடியாது எனப் பிரதிச் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார். 

தேசிய மட்டத்திலான கிரிக்கெட் வீரர்கள் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து செயற்படும் நபர்கள் என்பதால், அவர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

இதன்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நிஷான் சிட்னி பிரேமதிரத்ன நீதிமன்றத்தில் கருத்துரைகளை முன்வைக்கையில், உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் கிரிக்கெட் வீரர்களுக்கும் பொருந்தும் எனக் கூறினார். 

தனது வாடிக்கையாளர்கள் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழியர்கள் அல்லர் என்றும், அவர்கள் சுயாதீன சேவை வழங்குநர்கள் வகையிலேயே அடங்குவர் என்றும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார். 

இந்த வரி நெருக்கடி காரணமாக வீரர்களுக்குச் சேர வேண்டிய கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் சட்டத்தரணி நிஷான் சிட்னி பிரேமதிரத்ன மேலும் தெரிவித்தார். 

அதற்கமைய, இந்த விவகாரம் தொடர்பான எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகள் ஏதேனும் இருப்பின், அவற்றை ஒரு வார காலத்திற்குள் தாக்கல் செய்யுமாறு தரப்பினருக்கு உத்தரவிட்ட நீதியரசர் குழாம், இந்த வழக்குகள் தொடர்பான தீர்ப்பை ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதி அறிவிப்பதாக அறிவித்தது.


MOST READ

காணொளி
செம்மணியின் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும்!

செம்மணியின் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும்!

ரவிகரன் கோரிக்கை!

ரவிகரன் கோரிக்கை!

அரசின் நடவடிக்கை தான் என்ன?

அரசின் நடவடிக்கை தான் என்ன?

ஹட்டன் - கொழும்பு வீதியில் மீண்டும் போக்குவரத்து!

ஹட்டன் - கொழும்பு வீதியில் மீண்டும் போக்குவரத்து!

கொத்மலை வான் கதவுகள் திறப்பு

கொத்மலை வான் கதவுகள் திறப்பு

செம்மணியில் இதுவரை 481 எலும்புக்கூடுகள் மீட்பு!

செம்மணியில் இதுவரை 481 எலும்புக்கூடுகள் மீட்பு!

நாங்கள் எல்லாவற்றையும் Postive ஆக பார்க்கும் கட்சி!

நாங்கள் எல்லாவற்றையும் Postive ஆக பார்க்கும் கட்சி!

நஷ்டத்தை சந்திக்கும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதற்காக ஒப்பந்தத்தை வழங்குகின்றோம்!

நஷ்டத்தை சந்திக்கும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதற்காக ஒப்பந்தத்தை வழங்குகின்றோம்!

கிரகறி வாவியின் வான்கதவு திறப்பு

கிரகறி வாவியின் வான்கதவு திறப்பு

கடந்த கால அரசாங்கத்தைப் போல், அல்ல நாங்கள்!

கடந்த கால அரசாங்கத்தைப் போல், அல்ல நாங்கள்!

Mobitel Upahara