Aug 8, 2026 - 04:33 PM

மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையிலும், சிலாபத்திலிருந்து கற்பிட்டி ஊடாக மன்னார் வரையிலும் உள்ள கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
ஏனைய பகுதிகளிலிருந்து புறப்படும் படகுகள் இந்த ஆபத்தான கடற்பரப்புகளுக்குள் நுழைய வேண்டாம் என்றும் அறிக்கையொன்றை வெளியிட்டு அந்த அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள பல கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (08) அறிவித்துள்ளது.
இதற்கமைய, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும், சிலாபத்திலிருந்து கற்பிட்டி ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
இதன் காரணமாக அப்பகுதிகளின் கடல் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ காணப்படக்கூடும் என்பதால், கரையோர மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அப்பகுதிகள் மிகவும் ஆபத்தானவை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வரவிருக்கும் வானிலை முன்னறிவிப்புகள் குறித்து தீவிர அவதானம் செலுத்தி, பாதுகாப்பு அறிவுறுத்தல்களைச் சரியாகப் பின்பற்றுமாறு அனைத்து மீனவ சமூகத்தினரிடமும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு கோரியுள்ளது.












