Aug 18, 2026 - 07:23 AM



திட்டமிடப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினரான 'கஞ்சிபானை இம்ரான்' என்பவரின் நெருங்கிய உறவினராகக் (சித்தப்பா) கருதப்படும் 54 வயதான மொஹமட் அஸ்மின் மொஹிதீன் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட ஐந்து சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று (17) கைது செய்துள்ளனர்.
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாளிகாவத்தை, ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் கடந்த ஓகஸ்ட் 10 ஆம் திகதி பிற்பகல் வேளையில் இத்தூப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதோடு, பிரான்சில் தங்கியுள்ள திட்டமிடப்பட்ட குற்றக் குழு உறுப்பினரான 'கூடு அஞ்சு' என்பவரே இந்த கொலையை வழிநடத்தி உள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அதன்படி, குறித்த கொலை தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்திருந்த கொழும்பு வடக்கு குற்றவியல் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று காலை மற்றும் நண்பகல் வேளையில் இச்சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒரு ஆண் சந்தேகநபரும் ஒரு பெண் சந்தேகநபரும் 25 கிராம் 840 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆண் சந்தேகநபர் 21 வயதானவர் என்பதோடு, பெண் சந்தேகநபர் 23 வயதானவர் என்றும், இவர்கள் கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மற்றைய மூன்று சந்தேகநபர்களும் 12 கிராம் 380 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் மற்றும் குற்றத்திற்காகப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் 19, 25 மற்றும் 28 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் மட்டக்குளிய, தொம்பே மற்றும் முல்லேரியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் அமைந்துள்ள கட்டிடப் பொருட்கள் விற்பனை நிலையத்தின் உரிமையாளரை இலக்கு வைத்து கடந்த ஓகஸ்ட் 10ஆம் திகதி பிற்பகல் 1.20 மணியளவில் இத்தூப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்த நிலையில், தாக்குதலில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
சமீபத்தில் இரத்மலானை பகுதியில் 'கூடு அஞ்சு' என்பவரின் நெருங்கிய சகாவொருவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பழிவாங்கும் வகையிலேயே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

























