Aug 18, 2026 - 05:54 PM





இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மஹீல் சேனாரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (18) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரான மஹீல் சேனாரத்ன, ஊழல் குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டிருந்தார்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சகோதரரான மஹீல் சேனாரத்ன, 2010 - 2012 காலப்பகுதியில் மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.
அக்காலகட்டத்தில் நாடு முழுவதிலும் உள்ள மீன் விற்பனை நிலையங்களை நிர்மாணிப்பது மற்றும் புனரமைப்பதில் உரிய கொள்முதல் நடைமுறையைப் பின்பற்றாமல், நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 நிறுவனங்களுக்குப் பணிகளை வழங்கியமை மற்றும் அந்நிறுவனங்களுக்குக் கொடுப்பனவுகளை வழங்குவதற்காக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்துப் பணம் செலுத்த வழிவகுத்தமை ஆகியவையே இவர் மீதான குற்றச்சாட்டுகளாகும்.

























