Aug 18, 2026 - 05:41 PM





மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகளின் முன்னேற்றங்களை முறையாகக் கண்காணிக்கவும் அறிக்கையிடவும் ஏதுவாக, அமைச்சுக்களுக்கிடையிலான நிரந்தரக் குழுவொன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இலங்கை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான 09 உடன்படிக்கைகளிலும் 05 விருப்பத்திற்குரிய நடைமுறைப் பிரகடனங்களிலும் அரசாங்கத்தின் ஒரு தரப்பாக கையொப்பமிட்டுச் செயற்பட்டு வருகின்றது.
சர்வதேச உடன்படிக்கைகளுக்கு மேலதிகமாக, உலகளாவிய பருவக்காலப் பரிசீலனையில் (UPR) இலங்கையும் கலந்து கொண்டுள்ளதோடு, அதன் மூலம் மனித உரிமைகள் தொடர்பான முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காக தேசிய மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடைமுறைகளை சுயாதீனமாக முன்வைத்து வெளிப்படுத்துவதற்கு இலங்கைக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகளாவிய பருவக்காலப் பரிசீலனையின் 04 ஆவது சுழற்சியின் கீழ் இலங்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பரிசீலனையில், ஏனைய அரசுகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற சிபாரிசுகளை அமல்படுத்தும்போது அடைந்துள்ள முன்னேற்றங்களைக் குறிப்பிட்டு சுயாதீனமாக முன்வைக்கப்படுகின்ற இடைக்கால அறிக்கையை அடுத்த சுழற்சிக்கு முன்னர் சமர்ப்பிப்பதற்கு இலங்கைக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த அறிக்கையைத் தயாரிக்கும் பணிக்கு அரசின் அமைச்சுகளும், திணைக்களங்களும் மற்றும் நிறுவனங்களும் உள்ளடங்கலாகப் பயனுள்ள பங்களிப்புப் பங்காளிகளுடன் கூடிய தேசிய கட்டமைப்பொன்றைத் ஸ்தாபிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்த தொடர்பாடல் மற்றும் அறிக்கையிடல் பற்றிப் பயனுள்ள உள்நாட்டுச் செயல்முறைக்கு நிரந்தரத் தேசிய பரிசீலனையாகச் செயலாற்றுவதற்கு மனித உரிமைகள் தொடர்பான அமைச்சுக்களுக்கிடையிலான நிரந்தரக் குழுவொன்றை அமைப்பது அவசியமாகக் கருதப்படுகிறது.
இதனடிப்படையில், வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மற்றும் நிதி மற்றும் தேசிய திட்டமிடல் அமைச்சர் ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

























