Aug 19, 2026 - 01:34 PM





செலான் வங்கி, வெளிநாடுகளில் உயர் கல்வியைத் தொடர விரும்பும் இலங்கை மாணவர்களுக்கு நிதி வசதிகளை மேலும் எளிதாக அணுகக்கூடியதாக்கும் நோக்கில் முன்னணி சர்வதேசக் கல்வி ஆலோசனை நிறுவனமான AECC Global (Pvt) Ltd உடன் மூலோபாய கூட்டாண்மையொன்றில் இணைந்துள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள AECC Global, வெளிநாடுகளில் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு ஆதரவளித்து, அவர்களின் கல்விப் பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க உதவும் பன்னாட்டு நிறுவனமாகும். இக் கூட்டாண்மையின் மூலம், AECC வழங்கும் கல்வி ஆலோசனைச் சேவைகளை முழுமையாக்கும் வகையில் செலான் வங்கி, மாணவர்களும் அவர்களது குடும்பத்தினரும் தமது கல்விச் செலவுகளுக்கான நிதி ஏற்பாடுகளை எளிதாக மேற்கொள்ளும் வகையில் தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்ட நிதித்தீர்வுகளை வழங்கவுள்ளது.
இந்த ஒத்துழைப்பின் மூலம், வெளிநாட்டுக் கல்விக்குத் தயாராகும் AECC மாணவர்கள், செலான் வங்கியின் பல்வேறு வங்கிச் சேவைகளையும் நிதித்தீர்வுகளையும் சிரமமின்றி பெற்றுக்கொள்ள முடியும். கல்வி இலக்குகளுக்கும் நிதி ஆயத்தத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் இம் முயற்சி, மாணவர்கள் வெளிநாட்டில் கல்வியைத் தொடரும் பயணத்தை மேலும் நம்பிக்கையுடனும் சௌகரியத்துடனும் ஆரம்பிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக் கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த செலான் வங்கி பிஎல்சியின் தனிநபர் வங்கிச் சேவைகள் - பிரதிப் பொது முகாமையாளர், யூஜின் செனவிரத்ன, “வெளிநாடுகளில் உயர் கல்வியைத் தொடருவது, மாணவர்களின் வாழ்க்கையில் முக்கியமான மைல்கல்லாகும் என்பதை செலான் வங்கியில் நாங்கள் நன்கு புரிந்துள்ளோம். இக் கூட்டாண்மையின் மூலம் மாணவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் எளிதில் அணுகக்கூடிய, நம்பகமான நிதித்தீர்வுகளை வழங்குவதில் மேலும் உறுதுணையாக இருக்க முடிகிறது. மேலும் அவர்கள், மிக நியாயமான சேவைக் கட்டணத்திலும் கவர்ச்சிகரமான நாணய மாற்று விகிதங்களுடனும் வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வசதியையும் பெறுகின்றனர். இதன் மூலம், நிதி சார்ந்த கவலைகளின்றி மாணவர்கள் தங்களது கல்வி இலக்குகளை நோக்கி முழுக் கவனத்துடன் முன்னேற முடியும்.” என்றார்.
அடுத்த தலைமுறையினரின் கல்வி முன்னேற்றத்திற்கு அர்த்தமுள்ள நிதி ஆதரவை வழங்குவதற்கான செலான் வங்கியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இக் கூட்டாண்மை மேலும் உறுதிப்படுத்துவதுடன், இலங்கை இளைஞர்களுக்கான சர்வதேச வாய்ப்புகளை உருவாக்கும் நம்பகமான பங்காளியாக அதன் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது. மேலும், கல்வி நிறுவனங்களில் அனுமதி தொடர்பான வழிகாட்டல்களைத் தாண்டி, நிதித் திட்டமிடல் உள்ளிட்ட நடைமுறைத் தேவைகளுக்கும் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்ற AECC Global நிறுவனத்தின் நோக்கத்தையும் இது மேலும் வலுப்படுத்துகிறது.
சர்வதேச கல்விக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் இன்றைய சூழலில், இக் கூட்டாண்மை மிகவும் பொருத்தமான தருணத்தில் உருவாகியுள்ளது. வெளிநாட்டுக் கல்வி என்ற முக்கியமான அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறும் மாணவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும், ஒருங்கிணைந்த, நம்பகமான மற்றும் ஆதரவான அனுபவத்தை இது வழங்கும்.

























