Aug 21, 2026 - 01:58 PM





யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் நேற்று (20) நடைபெற்ற திருவிழாவின் போது அதிகளவில் வானவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் காரணமாக கண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பினால் 166 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் அதிகளவான சிறுவர்களும் பெண்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆலய உற்சவத்தின் போது அதிகளவில் வானவேடிக்கைகள் வெடிக்கப்பட்டதுடன், இசை நிகழ்வின்போதும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதன் காரணமாக பலருக்கு கண்களில் எரிச்சல், பார்வைக் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுமார் 120 பேரும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 46 பேரும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் அந்த பகுதியில் சுகாதார தரப்பினரால் தொடர்ந்தும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

























