Aug 24, 2026 - 03:38 PM





இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் - பேட்டர் ரிஷப் பண்ட், முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனியின் நீண்டகால சாதனையை முறியடித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
கொழும்பில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 2 ஆவது டெஸ்ட் போட்டியின் போது பண்ட் இந்த மைல்கல்லை எட்டினார்.
வெளிநாடு அல்லது இந்தியாவுக்கு வெளியே நடைபெறும் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக ஓட்டங்கள் குவித்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றுள்ளார். இதன் மூலம் தோனியின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
ரிஷப் பண்ட் 41.68 சராசரியுடன் 2,501 ஓட்டங்களை கடந்துள்ளார். எம்.எஸ். தோனி 2,496 ஓட்டங்களை வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் எடுத்துள்ளார். இப்பட்டியலில் பாரோக் இன்ஜினியர் (1,209 ஓட்டங்கள்), சையத் கிர்மானி (1,109 ஓட்டங்கள்) மற்றும் கிரண் மோரே (901 ஓட்டங்கள்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
இப்போட்டியின் முதல் நாளில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார வீசிய ஷார்ட் பந்து, ரிஷப் பண்ட்டின் இடது கையில் பலமாகத் தாக்கியது. இதனால் கடுமையான வலியால் அவதிப்பட்ட பண்ட், வைத்திய உதவிக்குப் பின் 3 ஓட்டங்கள் எடுத்திருந்த போது 'ரிட்டையர்ட் ஹர்ட்' (Retired hurt) ஆகி களத்திலிருந்து வெளியேறினார்.
இருப்பினும், இரண்டாம் நாளில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, காயம் காரணமாக ஏற்பட்ட வலியைப் பொருட்படுத்தாமல் மீண்டும் பேட்டிங் செய்ய களமிறங்கினார். துருவ் ஜூரெலுடன் இணைந்த பண்ட், இலங்கை பந்துவீச்சாளர்களின் ஷார்ட் பந்துகளைத் தைரியமாக எதிர்கொண்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினார். காயத்தையும் மீறி விளையாடி, தோனியின் வரலாற்றுச் சாதனையை முறியடித்த பண்ட்டின் இந்த ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. 89 பந்துகளை எதிர்கொண்ட அவர் 63 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.























