Aug 25, 2026 - 07:01 AM





களனி கங்கையிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் பகுதியில் நீரின் தரத்தைப் பாதித்த அவசர நிலைமை, முப்படையினரின் ஒத்துழைப்புடன் தற்போது சீர்செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பரிந்துரைக்கு அமைவாக, நீர் விநியோகத்தை மீண்டும் மேற்கொள்வதற்காகத் தேவையான நீரின் தரம் குறித்து ஆய்வகப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, அது குறிப்பிட்ட தரநிலைகளுக்கு அமைய உள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே நீர் விநியோகத்தை மீண்டும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அந்தச் சபை இன்று காலை 6 மணிக்கு வெளியிட்ட அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நீர் சுத்திகரிப்பு நிலையங்களைச் சார்ந்த பகுதிகளில் அடுத்த சில மணிநேரங்களுக்குள் நீர் விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவர முடியும் என எதிர்பார்க்கப்படுவதுடன், பத்தரமுல்ல, கோட்டே, பாமன்கடை மற்றும் நுகேகொடை போன்ற பகுதிகளில் நீர் விநியோகம் முழுமையாக வழமைக்குத் திரும்புவதில் சிறிது தாமதம் ஏற்படக்கூடும் என்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
நுகர்வோரின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு எடுக்கப்படும் இந்நடவடிக்கைகளுக்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அச் சபை மேலும் தெரிவித்துள்ளது.























