Aug 25, 2026 - 02:17 PM





தமிழக சட்டசபையில் இன்று (25) இயற்கை வளங்கள், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகள் மீதான மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது.
இதில் திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் தெரிவிக்கையில், 6 தொகுதியில் எம்எல்ஏக்கள் இல்லாத நிலையில் மக்கள் தங்களது பிரச்சினைகளை யாரிடம்? கூறுவர் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், “இராஜினாமா செய்யப்பட்ட 6 தொகுதிகளில் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு, அந்த தொகுதி மக்களின் குறைகள் கேட்கவும், தேவைகளை நிவர்த்தி செய்யவும் முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார் என தெரிவித்தார்.
"6 தொகுதிகளின் எம்எல்ஏக்கள் இராஜினாமா செய்துள்ளதால் அந்த தொகுதி மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளது. அந்த பகுதியில் உள்ள பொறுப்பு அமைச்சரால் தொகுதி பிரச்னையை முழுதுமாக அறிந்துகொள்ள முடியாது என்பதால்தான் சட்டப்பேரவை உறுப்பினர் தேவை" என தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொறுப்பு அமைச்சர்கள் மொத்த தொகுதி பிரச்சினைகளையும் அறிந்து கொள்ள முடியாது, எம்.எல்.ஏ.க்கள் தான் அந்த பணியை செய்ய முடியும் என்பதால்தான் சட்டப்பேரவை உறுப்பினர் தேவை" என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், “6 சட்டமன்ற தொகுதிகளில் விரைவாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் எங்கள் ஆர்வம், அதில் மாற்று கருத்து கிடையாது, அதில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்பதிலும் மாற்று கருத்து கிடையாது” என்று தெரிவித்தார்.
அமைச்சர் செங்கோட்டையனின் இந்த பேச்சுக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் இபிஎஸ் சொன்னதெல்லாம் வழக்கில் இருக்கிறது. அதை அவைகுறிப்பில் இருந்து நீக்குகிறேன் என்றார். மேலும் எடப்பாடி பழனிசாமி பேசும்போது மைக் அணைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் குதிரை பேரம் பற்றிய பேச்சை அவை முன்னவர் செங்கோட்டையன் தவிர்த்திருக்க வேண்டும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் வாபஸ் பெற்றது குதிரை பேரம் இல்லையா? என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அவர் வாபஸ் பெறவில்லை. ஒரு கட்சியில் இருந்து வெற்றி பெற்றுவிட்டு இராஜினாமா செய்துவிட்டு ஏன் தவெகவில் சேர வேண்டும்? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அவை மரபை மீறி சத்தமாக பேசவே, உடனே சபாநாயகர் எழுந்து நின்று இது என்ன பொதுக்கூட்டமா? இங்கு என்ன பொதுக்கூட்டமா நடத்துகிறோம்? என கோபமாக பேசினார். பேச அனுமதிக்கவில்லை என்றால் நிற்கதான் செய்வோம் என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார். பின்னர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உணர்ச்சிவசப்படாமல் பேச வேண்டும். உங்கள் உடலை வருத்திக்கொள்ளக்கூடாது என்று சொல்கிறேன். ' என்று சபாநாயகர் பேசினார். இவ்வாறு சட்டசபையில் காரசார விவாதம் நடந்தது.























