Aug 26, 2026 - 07:18 PM





போதைக்கு எதிரான சமூகக் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தென்னிந்தியத் தமிழ் திரைப்படமான ‘நல்லபடம்’ திரைப்படத்தின் இசை வெளியீடு இலங்கையில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் இசைக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.
‘நல்லபடம்’ திரைப்படத்தின் இசை இருவட்டு மற்றும் பாடல்களை இலங்கையின் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்.
திரைப்படத்தின் பாடல்களை ரசித்த அமைச்சர், படக்குழுவினரின் முயற்சிகளைப் பாராட்டியதுடன், திரைப்படத்தின் வெற்றிக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, இலங்கை சினிமாவின் உச்ச நட்சத்திரமும் முன்னாள் அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்கவும் ‘நல்லபடம்’ திரைப்படத்தின் இசை இருவட்டு மற்றும் பாடல்களை வெளியிட்டு வைத்து, படக்குழுவினருக்கு தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
மேலும், இலங்கை சினிமாவின் பிரபல நடிகர் ரோஷன் ரணவன, தொழிலதிபரும் திரைப்படத் தயாரிப்பாளருமான கந்தையா பாஸ்கரன் உள்ளிட்ட ஊடகப் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய ஆளுமைகளும் ‘நல்லபடம்’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் இசையை வெளியிட்டு வைத்து, படக்குழுவினரின் முயற்சிகளைப் பாராட்டியதுடன், திரைப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
ஹரிஷ் சினிமாஸ் சார்பில் ஏ. அழகு பாண்டியன் தயாரித்துள்ள ‘நல்லபடம்’ திரைப்படத்தை சி. பிரபுராம் இயக்கியுள்ளார்.
இதில் டாக்டர் ஏ.ஹரிஷ் கதாநாயகனாகவும், தனலட்சுமி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா, ரமா, பிரியதர்ஷினி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரைப்படத்திற்கு சகிஷ்னா சேவியர் இசையமைத்துள்ளார். திரைப்படத்தின் பாடல் வரிகளை இலங்கையின் பிரபல கவிஞரும் தமிழ் திரைப்பட பாடலாசிரியருமான ‘அய்யோ சாமி’ பாடல் புகழ் பொத்துவில் அஸ்மின் எழுதியுள்ளார்.
திரைப்படப் பாடல்களுக்கு வேல்முருகன், அருள் பிரகாஷம், புண்ணியா செல்வா, காயத்ரி ராஜீவ் மற்றும் சஷாங் ஆகியோர் குரல் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், ‘நல்லபடம்’ திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகத் தயாராகி வருகிறது.
இலங்கையில் கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து, சர்வதேச தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெறும் என படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.























