Aug 28, 2026 - 03:15 PM





எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக 110 மில்லியன் ரூபாய் பெறுமதியான புதிய இயந்திரங்களும் செயற்பாட்டு வாகனங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
இதன் கீழ், 79 மில்லியன் ரூபாய் செலவில் இரண்டு வீல் லோடர்களும், 18 மில்லியன் ரூபாய் செலவில் இரண்டு டிப்பர் லொறிகளும், 13 மில்லியன் ரூபாய் செலவில் இரண்டு ஃபோர்க்லிப்ட் இயந்திரங்களும் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துநெத்தியின் தலைமையில் நேற்று (27) நடைபெற்ற இந்நிகழ்வில், நிறுவனத்தின் செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்காக தெரிவு செய்யப்பட்ட புதிய சாரதிகளுக்கு நியமனக் கடிதங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
கடந்த 20 மாத காலப்பகுதிக்குள் எப்பாவல லங்கா பொஸ்பேட் நிறுவனம் பாரிய முன்னேற்றங்களை எட்டியுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், இந்த காலப்பகுதியில் 76 மில்லியன் ரூபாய் புதிய முடிக்கப்பட்ட பொருட்கள் களஞ்சியசாலை நிர்மாணம், இயங்காமல் இருந்த க்ரஷர் இயந்திரத்தை மீள செயற்படுத்தல், உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் விற்பனை துரித தொலைபேசி இலக்கத்தை மீள இயங்கச் செய்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன், நுகர்வோர் நம்பிக்கையையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதிப்படுத்தும் வகையில் உற்பத்திகளின் அதிகபட்ச சில்லறை விலையை அச்சிடுதல், (2026-2030) புதிய மூலோபாயத் திட்டத்தை வெளியிடுதல், சந்தைக்கு 'APM' எண்ணெய் உரம் அறிமுகம் மற்றும் 'ERP' மாதிரிகளைச் சலுகை விலையில் வழங்குதல் என்பனவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.























