Aug 28, 2026 - 01:34 PM





இரண்டு நாட்களுக்கு முன்பு பனிப்பாறை சரிவு காரணமாக உயிரிழப்புகளை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, திபெத்தில் உள்ள மேடான பகுதியில் உள்ள அணை ஒன்று உடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியானதை அடுத்து, இன்று (28) நேபாளம் உயர்வான பகுதிகளுக்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.
"திபெத் பகுதியில் மீண்டும் ஒரு நீர்த்தேக்க அணை உடைந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது" என்று நேபாளம் பொலிஸார் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கையில்,
"மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்துப் பாதுகாப்புப் பணியாளர்கள், மீட்புப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும், உடனடியாகப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறும் அல்லது இச்சம்பவம் குறித்துத் தெரிவிக்கமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்".
கடந்த புதன்கிழமை ஏற்பட்ட இந்தப்பேரிடர் — 2015 நிலநடுக்கத்திற்குப் பிறகு நேபாளத்தில் மிகக் கொடூரமான உயிரிழப்புகளை ஏற்படுத்திய பேரிடர் — பனிப்பாறை சரிவினால் ஏற்பட்டு, பெரிய அளவிலான பனி மற்றும் குப்பைகளின் பெருக்கெடுப்புக்குக் காரணமாக அமைந்தது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெள்ளப்பெருக்குக்கான புதிய அபாயங்கள் காரணமாக, திபெத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் சீனா தனது மீட்புப் பணியை நிறுத்திவைத்துள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சீனா-நேபாள எல்லையைச் சேற்றில் மூழ்கடித்த நிலச்சரிவைத் தொடர்ந்து உருவான பெரும் குப்பைக் குவியல்களால் உருவாக்கப்பட்ட ஏரி, மீட்புக் குழுவினர் சென்றுகொண்டிருந்த ஜியிரோங் எல்லைப் பகுதியை நோக்கி வழியத் தொடங்கியுள்ளது என்று சீனாவின் அரச ஊடகமான சிசிடிவி தெரிவித்துள்ளது.
நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் சாந்தி மஹத், தண்ணீரின் மட்டத்தில் ஆரம்பத்தில் உயர்வு காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தேசிய பேரிடர் இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையத்தில் (NDRRMA) பணிபுரியும் மஹத் கூறுகையில், "ரசுவாவின் போதே கோஷி நதியில் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட அதே பகுதியில் செம்மண் கலந்த நீரின் ஓட்டம் சற்று அதிகரித்துள்ளதாகவும், மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது" என்றார்.
"எனவே, போதே கோஷி மற்றும் திரிசூலி நதிக்கரைகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவரும், மற்றும் பல்வேறு காரணங்களால் ஆபத்தான பகுதியில் உள்ளவர்களும் அதிக விழிப்புடன் இருக்குமாறும், ஏதேனும் ஆபத்தைக் கண்டால் உடனடியாகப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறும் சிறப்பாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்".























