Aug 31, 2026 - 03:17 PM





அரசாங்கத்தின் எரிபொருளைத் துஷ்பிரயோகம் செய்ததாகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளைத் தாம் முழுமையாக நிராகரிப்பதாக முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், எரிபொருள் பயன்பாடு தொடர்பில் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகள் குறித்துச் சரியான முறையில் ஆராயாமல், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய மின்னணு ஊடகங்கள் வாயிலாகப் பொய்த் தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனது பதவிக் காலத்தில் சட்டபூர்வமாகத் தனக்கு உரித்தான ஒதுக்கீடுகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வரம்புகளுக்கு உட்பட்டு மட்டுமே எரிபொருள் பெறப்பட்டதாகவும், அது தொடர்பான அனைத்து உத்தியோகபூர்வ ஆவணங்களும் அறிக்கைகளும் தம்மிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சரியான விசாரணை இன்றி ஊடகங்கள் முன் இவ்வாறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது வருத்தத்திற்குரியது என்றும் முன்னாள் பிரதி சபாநாயகர் கூறியுள்ளார்.
பிரதி சபாநாயகராகக் கடமையாற்றுவதற்குப் பொருத்தமான உத்தியோகபூர்வ வாகனம் இல்லாததால், வெளியிலிருந்து வாடகை அடிப்படையில் வாகனத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புத் தனக்கு இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு வெளியிலிருந்து வாகனத்தைப் பெற்றிருந்தால் பெருந்தொகை பணம் செலவாகியிருக்கும் என்பதால், அந்த வாடகைக் கட்டணத்திற்காகச் செலவிடப்படவிருந்த பணத்தைச் சேமிக்கும் வகையில் தாம் செயற்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
முன்னாள் சபாநாயகர்கள் மற்றும் பிரதி சபாநாயகர்கள் தொடர்பில் காணப்பட்ட பாரம்பரியங்கள், சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு அமையவே தாம் பதவியில் செயற்பட்டதாகவும், எவ்வித சட்டவிரோதச் செயல்களிலும் ஈடுபடவில்லை என்றும் முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, தற்போதைய அரசாங்கத்தில் பதவி வகிக்கும் மற்றும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நபர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மூடிமறைக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தாம் நம்புவதாகவும் அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.























