Aug 31, 2026 - 04:25 PM





கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவான ‘தி ஒடிசி’ திரைப்படம் ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
ஹாலிவுட்டின் முன்னணி இயக்குனரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்த ஜுலை 17 ஆம் திகதி வெளியான திரைப்படம் ‘தி ஒடிசி’. கிரேக்க இலக்கிய காவியமான ‘ஒடிசி’யை மையமாக வைத்து இயக்கப்பட்டிருக்கிறது. கிரேக்க காவியத்தில் சிறப்பானதாக பார்க்கப்படும் டிரோயன் போரில் பங்கேற்ற ஒடிசியஸ் என்ற மன்னனை முதன்மைப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.
அந்த போருக்கு பின் ஒடிசியஸ் நாடு திரும்பும் பயணத்தில் சந்திக்கும் பிரச்சினைகள்தான் கதைக்களம். 250 மில்லியன் அமெரிக்க டொலரில் (இந்திய மதிப்பில் சுமார் 2,500 கோடி ரூபா) தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில், டாம் ஹாலண்ட், ஆன் ஹாத்வே, ஜெண்டயா உள்பட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இத்திரைப்படம், தற்போது உலகளவில் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 14,800 கோடி ரூபாய்) கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
முன்னதாக உலக அளவில் அதிக வசூல் செய்து சாதனை படைத்த ‘தி அவெஞ்சர்ஸ்’ மற்றும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ ஆகிய பிரம்மாண்ட படங்களின் வசூல் சாதனையை ‘தி ஒடிசி’ தற்போது முறியடித்துள்ளது. இதன் மூலம் உலக சினிமா வரலாற்றில் அதிக வசூல் குவித்த திரைப்படங்களின் பட்டியலில் 14 ஆவது இடத்தைப் பிடித்து ‘தி ஒடிசி’ வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
நோலனின் அசாதாரண மேக்கிங், பிரமிக்க வைக்கும் காட்சிகளமைப்பு மற்றும் வலுவான திரைக்கதை ஆகியவை இத்திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. தொடர்ந்து திரையரங்குகளில் ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வரும் இத்திரைப்படம், வரும் நாட்களில் மேலும் பல வசூல் சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய பிரம்மாண்ட சாதனையைப் படைத்துள்ள இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் மற்றும் படக்குழுவினருக்கு உலகெங்கிலும் உள்ள திரையுலக பிரபலங்களும் திரைப்பட ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.























