Aug 31, 2026 - 03:43 PM





இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (31) இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.
தேசிய லொத்தர் சபையின் விசேட திட்டம் ஒன்றுக்காகச் சேர்க்கப்பட்ட மூன்று ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக ரவி கருணாநாயக்க இன்று இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையானார்.
இந்த விசாரணை தொடர்பில் முன்னர் வாக்குமூலம் அளிப்பதற்கு வருகை தருமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அந்தச் சந்தர்ப்பத்தில் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருக்கவில்லை.
இதன் காரணமாக அண்மையில் இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கும் சென்றிருந்த நிலையில், அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் வீட்டில் இருக்கவில்லை.
தனது மகளின் திருமணக் கடமைகள் காரணமாக வாக்குமூலம் அளிப்பதற்கு வேறொரு திகதியை வழங்குமாறு அவரது சட்டத்தரணிகள் ஊடாகக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய வழங்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய இன்றைய தினம் இலஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையானதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.























