Sep 1, 2026 - 10:18 PM

பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்க அரசு தவறியுள்ளதன் காரணமாக நாளை போராட்டம் ஒன்றை நடத்த தயார் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) தெரிவித்துள்ளது.
நாளை (02) மதிய உணவு வேளையின் போது அனைத்து அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இணைந்து இப்போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அச்சம்மேளனத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கு தீர்வு காணத் தவறினால், வரும் வாரத்தில் இப்போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் அரசுப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனமாக அரசுப் பல்கலைக்கழக அமைப்பில் உள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதாகவும், அதற்கான யோசனைத் திட்ட மொன்றை அரசாங்கத்திற்கு வழங்கியதாகவும் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்தார்.
எனினும், அந்த யோசனைகளையோ அல்லது கலந்துரையாடல்களின் போது எட்டப்பட்ட உடன்பாடுகளையோ அரசாங்கம் நடைமுறைப்படுத்தாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இப்பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமும் கலந்துரையாடியதாகக் கூறிய அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அரசுப் பல்கலைக்கழக அமைப்பில் உள்ள பிரச்சினைகள் குறித்து எழுத்து மூலமும் அறியப்படுத்தியதாகத் தெரிவித்தார்.
இருப்பினும், இதுவரை அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் தவறியுள்ளதாகத் தெரிவித்த அவர், தற்போது பல்கலைக்கழக அமைப்பிலிருந்து பல விரிவுரையாளர்கள் சேவையை விட்டு விலகியுள்ளதாகவும் குறிப்பிட்டார.
2015ஆம் ஆண்டளவில் அரசுப் பல்கலைக்கழக அமைப்பிற்கு ஒரு வருடத்திற்கு 25,000 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டதாகவும், தற்போது அது ஒரு வருடத்திற்கு 45,000 மாணவர்கள் வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், 2015இல் அரசுப் பல்கலைக்கழக அமைப்பில் 5,800 விரிவுரையாளர்கள் இருந்த போதிலும், தற்போது அவர்களில் 1,000க்கும் மேற்பட்டோர் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறியுள்ளதாகக் கூறினார்.
இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க,
"கடந்த சில ஆண்டுகளில் பெருமளவிலான பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறினர். தற்போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நியமனங்கள் திறக்கப்பட்டுள்ள போதிலும், அந்தப் பதவிகளுக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் விண்ணப்பிக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரசுப் பல்கலைக்கழக அமைப்பு சீர்குலைவது என்பது இந்நாட்டின் எதிர்காலம் சீர்குலைவதாகும். எனவே, அரசாங்கத்திடம் நாங்கள் கூறுவது என்னவென்றால், இதைக் காதுகொடுத்துக் கேட்க முடியாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்க நாங்கள் தயார். நாங்கள் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக இது குறித்துக் கலந்துரையாடினோம். தீர்வு இல்லாத நிலையில், நாளை மதிய உணவு வேளையில் அனைத்து அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம். ஆனால், அரசாங்கம் இதற்குத் தீர்வு தரும் வரை இந்தப் போராட்டத் தொடரைத் தடையின்றித் தொடர நாங்கள் தீர்மானித்துள்ளோம்." என்றார்.



























