Sep 1, 2026 - 10:37 PM

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் “Ceylon King Coconut Village” தேசிய திட்டம் நாளை (02) குருநாகல் மாவட்டத்தின் தெங்கு பயிர்ச்செய்கை சபைக்குச் சொந்தமான மஹாயாய தோட்ட வளாகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாட்டின் இளநீர் பயிர்ச்செய்கையை விரிவுபடுத்தி உற்பத்தியையும் உற்பத்தித்திறனையும் அதிகரிப்பதும், இளநீர் மற்றும் அது சார்ந்த உற்பத்திகளுக்கான சர்வதேச சந்தையை விரிவுபடுத்துவதும் இதன் முதன்மை நோக்கங்களாகும்.
இத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் 75 கிராமங்களும், 2027 ஆம் ஆண்டில் 80 கிராமங்களும், 2028 ஆம் ஆண்டில் 95 கிராமங்களும் என, மூன்று ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் 250 இளநீர் கிராமங்கள் நிறுவப்படவுள்ளன.
2030 ஆம் ஆண்டாகும்போது இலங்கையின் வருடாந்த இளநீர் அறுவடைகளை 25 மில்லியனால் அதிகரிப்பதும், இளநீர் மற்றும் அது சார்ந்த ஏற்றுமதி வருமானத்தை 12 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகையால் அதிகரிப்பதும் இத்திட்டத்தின் முக்கிய இலக்குகளாகும்.
இதன்போது இளநீர் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், தற்போதுள்ள இளநீர் மரங்களைப் புனரமைக்கும் போது ஒரு மரத்திற்கு ரூ. 700 நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
அத்துடன், புதிய பயிர்ச்செய்கைக்காக ஒரு இளநீர் கன்றின் பெறுமதி ரூ. 750 ஆக இருப்பினும், விவசாயிகளுக்கு அது ரூ. 150 என்ற மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டில் 20,300 இளநீர் மரங்களைப் புனரமைக்கவும், 37,500 புதிய இளநீர் கன்றுகளை நடவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதுடன், 2026–2028 காலப்பகுதியில் புதிய பயிர்ச்செய்கைக்காக 212,500 கன்றுகளை நடவு செய்யவும், தற்போதுள்ள 221,500 இளநீர் மரங்களைப் புனரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் ஆரம்ப கட்டமாக மொனராகலை, மாத்தறை, குருநாகல், கேகாலை, கம்பஹா, களுத்துறை, புத்தளம், இரத்தினபுரி, அம்பாந்தோட்டை, அனுராதபுரம், திருகோணமலை, பொலன்னறுவை, அம்பாறை, மாத்தளை, காலி, மட்டக்களப்பு மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் 75 கிராமங்களில் இந்த ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மேலும், இளநீர் உற்பத்தியாளர்கள், சேகரிப்பாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களை உள்ளடக்கிய முறையான தரவுத்தளமொன்றை நிறுவுதல், 500 ஏக்கர் இளநீர் பயிர்ச்செய்கைக்கு நீர்ப்பாசன வசதிகளை வழங்குதல் மற்றும் இளநீர் பயிர்ச்செய்கை சார்ந்த வருமானம் மற்றும் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துதல் என்பனவும் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளன.
“Ceylon King Coconut Village” தேசிய திட்டத்தின் மூலம் இளநீர் பயிர்ச்செய்கை, சேகரிப்பு, போக்குவரத்து, பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி சார்ந்து புதிய வருமானம் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, 21,250 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் இதன் மற்றொரு நோக்கமாகும்.
இதன் மூலம் கிராமப்புற மக்களின் வருமானத்தை வலுப்படுத்தி, அவர்களை தேசிய பொருளாதார வளர்ச்சியின் நேரடிப் பங்காளிகளாக மாற்றுவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.



























