Sep 2, 2026 - 09:08 PM

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகளுக்காக பூரண நீதியரசர்கள் அடங்கிய ஆயத்தினை நியமிப்பதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டமைக்கு, பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் தமது கவலையை வௌியிட்டுள்ளார்.
பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் (CLA) தலைவர் ஸ்டீவன் திரு, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான உயர் நீதிமன்ற விசாரணையை அவதானிப்பதற்காக இன்று (02) கலந்துகொண்டிருந்தார்.
இந்த வழக்கு தொடர்பான கவலைகள் குறித்து சட்டத்துறையைச் சேர்ந்த பலருடன் தாம் கலந்துரையாடியதாக அவர் கூறினார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வௌியிட்ட அவர், நீதித்துறையின் சுதந்திரத்திற்கு இது மிகவும் முக்கியமானது என்பதால், இந்த வழக்கை விசாரிக்க ஏன் ஒரு விரிவான அமர்வு அல்லது பூரண நீதியரசர்கள் அடங்கிய ஆயம் நியமிக்கப்படவில்லை என்பது சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட முக்கிய கவலைகளில் ஒன்றாகும் எனக் குறிப்பிட்டார்.
முக்கியமான அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை சார்ந்த வழக்குகள் வழக்கமாகப் பெரிய அமர்வுகளாலேயே விசாரணை செய்யப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், பூரண ஆயத்திற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகத் தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார்.
நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பில் கவலைக்குரிய விடயமாக இதைக் குறிப்பிட்ட திரு, விரிவான அல்லது முழுமையான அமர்வை அமைக்காமைக்கான காரணங்கள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதேவேளை, அரசாங்கத்தினால் அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் இன்று (02) நிறைவு செய்தது.
அந்தச் சட்ட மூலத்தின் அரசியலமைப்பு அமைவுடைமை தொடர்பான வியாக்கியானத்தை பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைப்பதாக இன்று (2) உயர்நீதிமன்றம் அறிவித்தது.
அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையானது நேற்றும் (1) இன்றும் (2) இரண்டு நாட்களாக இடம்பெற்றிருந்தது.
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேன, அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர் ஆயத்தின் முன்னிலையில் இந்த மனுக்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அதற்கமைய, 22ஆவது திருத்ததை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் 67 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அவற்றில் 41 மனுக்கள் இணையவழி (Online) மூலம் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அரசியலமைப்பு திருத்தம் ஒன்றுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் அதிகூடிய எண்ணிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.



























