Sep 4, 2026 - 11:53 AM

இலங்கை 2026ஆம் ஆண்டில் சர்வதேச அல்சைமர் மாதத்தைக் கடைப்பிடிக்கும் நிலையில், மூளையின் ஆரோக்கியம் மற்றும் டிமென்ஷியா நிலைமைகளைத் தடுப்பது தொடர்பில் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கோரும் லங்கா அல்சைமர் அறக்கட்டளை
உலக அல்சைமர் மாதத்தை முன்னிட்டான தேசிய விழிப்புணர்வு பிரசாரத்தில் டிமென்ஷியா நிலைமைகளைத் தடுப்பதில் கவனம் செலுத்தியுள்ள லங்கா அல்சைமர் அறக்கட்டளை, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
2024ஆம் ஆண்டில் டிமென்ஷியா தடுப்பு, தலையீடுகள் மற்றும் பராமரிப்பு தொடர்பில் The Lancet Commission மேற்கொண்ட ஆய்வுக்கு அமைய, ஒருவரது வாழ்நாள் முழுவதும் கட்டுப்படுத்தக்கூடிய 14 ஆபத்துக் காரணிகளில் கவனம் செலுத்துவதன் மூலம், டிமென்ஷியா நிலைமைகளில் 45 சதவீதத்தைத் தடுக்கவோ அல்லது அதன் தொடக்கத்தைத் தாமதப்படுத்தவோ முடியும் என்பது தெரியவந்துள்ளது.
போதிய உடல் செயல்பாடுகளில் ஈடுபடாமை, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, புகைப்பிடித்தல், அதிகளவில் மதுபானம் அருந்துதல், சமூக ரீதியாகத் தனிமைப்படுத்தப்படுதல், சிகிச்சையளிக்கப்படாத செவித்திறன் மற்றும் பார்வைக் குறைபாடுகள், இரத்தத்தில் LDL கொலஸ்ட்ரோல் அளவு அதிகரித்தல், உடற்பருமன், காற்று மாசுபாடு, மனச்சோர்வு, மூளையில் காயம் ஏற்படுதல் மற்றும் குறைந்த கல்வி மட்டம் ஆகியவை ஆபத்துக் காரணிகளாக இதில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
“டிமென்ஷியா நிலைமைகளில் 45 சதவீதத்தைத் தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கையை நம்மால் எடுக்க முடியும் என்பதை வலியுறுத்துவது மிகவும் முக்கியமான விடயமாகும். டிமென்ஷியா நோயின் மிகவும் பொதுவான வடிவம் அல்சைமர் நோயாகும்,” என லங்கா அல்சைமர் அறக்கட்டளையின் தலைவர் பேராசிரியர் ஷெஹான் வில்லியம்ஸ் தெரிவித்தார்.
அனைத்து டிமென்ஷியா நிலைமைகளையும் தடுக்க முடியாது என்பதுடன், சில ஆபத்துக் காரணிகளையும் எம்மால் கட்டுப்படுத்த முடியாது. இருப்பினும், ஆரம்ப கட்டத்திலேயே மாற்றங்களைக் கண்டறிந்து ஆபத்தைக் குறைப்பதற்கும், ஆரோக்கியமான முதுமைக்கு உதவும் சூழலை உருவாக்குவதற்கும் தனிநபர்கள், குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களால் மேற்கொள்ளப்படக் கூடிய பல நடவடிக்கைகள் உள்ளன.
25 ஆண்டுகளாக மாற்றத்தை ஏற்படுத்தி வரும் லங்கா அல்சைமர் அறக்கட்டளை
2001ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை அல்சைமர் அறக்கட்டளை, இவ்வாண்டு தனது 25ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. அத்துடன், கொழும்பில் அமைந்துள்ள அதன் செயற்பாடுகள், சேவைகள் மற்றும் தகவல் நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் 15 ஆண்டுகள் நிறைவும் இவ்வாண்டில் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையம் கடந்த 25 ஆண்டுகளாக டிமென்ஷியா கொண்ட நபர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் மிகவும் பெறுமதியான ஆதரவை வழங்கும் இடமாகத் திகழ்கிறது. டிமென்ஷியா கொண்ட நபர்கள் சௌகரியமாகப் பங்கேற்கக்கூடிய சூழல் இங்கு உருவாக்கப்பட்டிருப்பதுடன், அவர்களின் நினைவாற்றலைத் தூண்டும், சமூகத் தொடர்புகளை மேம்படுத்தும், கண்ணியம் மற்றும் நல்வாழ்வை அதிகரிக்கும் அர்த்தமுள்ள செயற்பாடுகளில் அவர்கள் பங்கேற்பதற்கான வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
லங்கா அல்சைமர் அறக்கட்டளை ஊடாக இலவச நினைவாற்றல் பரிசோதனைகள் மற்றும் அறிவாற்றல் திறன் மதிப்பீடுகள், டிமென்ஷியாவின் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கான அறிவாற்றலைத் தூண்டும் சிகிச்சை (CST), டிமென்ஷியா கொண்ட நபர்களைப் பராமரிப்போருக்கான ஆதரவுக் குழுக்கள், சமூக விழிப்புணர்வுத் திட்டங்கள், டிமென்ஷியா நட்புறவான சமூகத் திட்டங்கள் மற்றும் டிமென்ஷியா ஏற்படும் அபாயத்தைக் குறைப்பது தொடர்பான கல்வி வளங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் சமூகத்திற்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.
லங்கா அல்சைமர் அறக்கட்டளை தனது சமூகத் திட்டங்கள் ஊடாக டிமென்ஷியா தொடர்பான பொதுமக்களின் புரிதலை அதிகரிப்பதுடன், அதன் அபாயத்தைக் குறைப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
காலி, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படும் டிமென்ஷியாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான சமூகத் திட்டத்தின் ஊடாக, முதியோர் சங்கங்களுடன் இணைந்து செயற்பட்டு, முதுமைக் காலத்தில் சுறுசுறுப்பை ஊக்குவித்தல், ஆதரவான சூழலை உருவாக்குதல் மற்றும் டிமென்ஷியா தொடர்பான புரிதலை அதிகரித்தல் ஆகிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாண்டில் இந்தத் திட்டங்கள் கண்டி மாவட்டத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
லங்கா அல்சைமர் அறக்கட்டளையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் தன்னார்வ சேவை, பயிற்சி மற்றும் அவதானிப்பு நிகழ்ச்சிகள் ஊடாக, எதிர்கால சுகாதாரத்துறை நிபுணர்களுக்கு டிமென்ஷியா பராமரிப்பில் பயன்படுத்தப்படும் மருந்துகள் அல்லாத சிகிச்சை முறைகள் தொடர்பில் பெறுமதியான நடைமுறை அனுபவம் கிடைக்கிறது.
பாடசாலை விழிப்புணர்வுத் திட்டங்கள், மும்மொழிகளிலும் பேணப்படும் லங்கா அல்சைமர் அறக்கட்டளை இணையத்தளம், சமூக ஊடகப் பக்கம் மற்றும் கல்வி வளங்கள் ஆகியவற்றின் ஊடாகவும், இலங்கை முழுவதும் உள்ள சமூகங்களிடையே டிமென்ஷியா தொடர்பான விழிப்புணர்வை மேலும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
சுறுசுறுப்பாக இருப்போம், இணைந்து செயல்படுவோம், மனதைச் சுறுசுறுப்பாக வைத்திருப்போம்
இம்முறை சர்வதேச அல்சைமர் மாதத்தை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சிகளின் ஊடாக, மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதை எமது அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற செய்தி மக்களுக்கு வலியுறுத்தப்படுகிறது.
ஞாபகத்திற்கான ஒட்டம் நிகழ்ச்சி (Run to Remember) – செப்டெம்பர் 5
தாஜ் சமுத்திரா நிறுவனத்தின் ஆதரவுடன் வருடாந்தம் நடத்தப்படும் 5 கிலோமீற்றர் சுரn வழ சுநஅநஅடிநச ஓட்டப்பந்தைய நிகழ்ச்சியில் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு, டிமென்ஷியாவினால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து ஆதரவை வெளிப்படுத்துகின்றனர்.
சுறுசுறுப்பான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமான வாழ்வியல் பழக்கவழக்கங்கள் மூளையின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை என்பதை எடுத்துக்காட்டுவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
ஞாபகத்திற்கான நடைபயணம் (Memory Walk) – செப்டெம்பர் 19
வருடாந்தம் நடைபெறும் ஞாபகத்திற்கான நடைபயணம் நிகழ்ச்சி (ஆநஅழசல றுயடம) 24வது வருடமாகவும் இம்முறை சினமன்ட் கிரான்ட் நிறுவனத்தின் ஆதரவுடன் நடைபெறுகிறது. லங்கா அல்சைமர் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களை ஒன்றிணைத்து, 5 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட காலை நேர நடைபவனியாக இது நடத்தப்படுகிறது.
நடைபயிற்சி என்பது உடல் ரீதியாகச் சுறுசுறுப்பாக இருப்பதற்கான மிகவும் எளிமையானதும் இலகுவானதுமான வழிகளில் ஒன்றாகும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து நடைப்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் சமூகத் தொடர்புகளை மேம்படுத்திக்கொள்ள முடிவதுடன், உடல் செயல்பாடுகளை அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாற்றிக்கொள்ளவும் அது உதவுகிறது.
சர்வதேச அல்சைமர் தினம் – செப்டெம்பர் 21
சர்வதேச அல்சைமர் தினத்தை முன்னிட்டு, லங்கா அல்சைமர் அறக்கட்டளை தனது செயற்பாடுகள், சேவைகள் மற்றும் தகவல் நிலையம் ஆரம்பிக்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு அதன் ஆண்டு நிறைவையும் கொண்டாடுகிறது.
இந்நிகழ்வின்போது, டிமென்ஷியாவினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் கௌரவம் செலுத்தப்படுவதுடன், கடந்த 25 ஆண்டுகளாக லங்கா அல்சைமர் அறக்கட்டளையின் பணிகளுக்குப் பங்காற்றிய தன்னார்வலர்கள், சுகாதாரத்துறை நிபுணர்கள், நன்கொடையாளர்கள், பங்காளர்கள் மற்றும் ஆதரவு வழங்கிய அனைவரும் பாராட்டப்படுகின்றனர்.
அனைத்து வயதினருக்குமான செய்தி
டிமென்ஷியாவைத் தடுப்பது தொடர்பான தகவல்கள் வயதானவர்களுக்கு மட்டுமே உரித்தானதல்ல என்பதை லங்கா அல்சைமர் அறக்கட்டளை வலியுறுத்துகிறது. வாழ்நாள் முழுவதும் மூளையின் ஆரோக்கியத்தைப் பேணுவது முக்கியமானதாகும். டிமென்ஷியா ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எந்த வயதிலும் ஆரம்பிக்க முடியும்.
உடல் செயல்பாடுகளில் ஈடுபடுதல், சமூகத் தொடர்புகளைப் பேணுதல், மனதைச் சுறுசுறுப்பாக வைத்திருத்தல், பல்வேறு சுகாதார நிலைமைகளை முறையாகக் கட்டுப்படுத்துதல், புகைப்பிடித்தல் மற்றும் அதிகளவான மதுபானப் பாவனையைத் தவிர்த்தல், அத்துடன் நினைவாற்றல் மற்றும் சிந்தனைத் திறனில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பில் கவனம் செலுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ளுமாறு தனிநபர்களையும் குடும்பங்களையும் லங்கா அல்சைமர் அறக்கட்டளை ஊக்குவிக்கிறது.
அதேவேளை, வயதானவர்கள் சுறுசுறுப்பாக இருப்பதற்கும், சமூகத் தொடர்புகளைப் பேணுவதற்கும், சமூகத்தில் செயற்பாட்டுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கும், தமது பெறுமதியை உணர்வதற்கும் வாய்ப்பளிக்கும் வகையில் சமூகத்தை உருவாக்குவதும் மிகவும் முக்கியமானதாகும்.
லங்கா அல்சைமர் அறக்கட்டளை தனது அடுத்த 25 ஆண்டுகளை ஆரம்பிக்கும் இச்சந்தர்ப்பத்தில், டிமென்ஷியாவுடன் வாழும் எவரும் அதனைத் தனியாக எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படாத வகையில் அவர்களுக்கு ஆதரவளிப்பதில் தன்னை அர்ப்பணித்துள்ளது.
இந்த வருடத்திற்கான சர்வதேச அல்சைமர் மாதத்தின் செய்தி
இம்முறை சர்வதேச அல்சைமர் மாதம் வழங்கும் செய்தி மிகவும் எளிமையானது:
மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் இன்றே உறுதிபூணுவோம். அதற்கான முதல் அடியை எடுத்துவைப்போம். அபாயத்தைக் குறைத்துக்கொள்வோம். அறிகுறிகளை முன்கூட்டியே அடையாளம் காண்போம். கண்ணியம், சமூகத் தொடர்புகள் மற்றும் பரஸ்பர ஆதரவுடன் அனைவரும் இணைந்து வயதாகக்கூடிய சமூகத்தை உருவாக்குவதில் நீங்களும் இணைந்துகொள்ளுங்கள்.
லங்கா அல்சைமர் அறக்கட்டளை, அதன் சேவைகள் மற்றும் சர்வதேச அல்சைமர் மாதத்தை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சிகள் தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள, அறக்கட்டளையின் மும்மொழி இணையத்தளத்தைப் பார்வையிடுவதுடன், அதன் சமூக ஊடகப் பக்கங்களுடனும் இணைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



























