Sep 4, 2026 - 11:56 AM

The Geoffrey Bawa Moonamal Award அதன் தொடக்க விருதுகளுக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. இலங்கையின் வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கத்துடன் (Wildlife and Nature Protection Society of Sri Lanka - WNPS) இணைந்து வழங்கப்படும் இந்த விருது, இயற்கையும் சுற்றுச்சூழல் அமைப்புகளும் செழித்து வளர இடமளிக்கும் அதே வேளையில், மனித தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்ய முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களைச் சமர்ப்பிக்குமாறு நாடு முழுவதும் உள்ள தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கிறது.
இந்த விருதுக்கான விண்ணப்பங்கள் இரண்டு முக்கிய பிரிவுகளின் கீழ் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அவற்றுள் கட்டிடங்கள் மற்றும் இயற்பியல் சூழல் பிரிவின் கீழ் கட்டிடக்கலை, உட்கட்டமைப்பு, நகரத் திட்டமிடல் மற்றும் பூங்கா வடிவமைப்பு ஆகியன உள்ளடங்கும். அரசு கொள்கைகள் பிரிவுக்கு சூழல்நேய வடிவமைப்பை ஊக்குவிக்கும் மற்றும் அதற்கு இடமளிக்கும் சிறப்புக் கொள்கைத் திட்டங்கள் பரிசீலிக்கப்படும். ஒரு தொழிலுக்கு அல்லது ஒரு துறைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாத இந்த விருதுக்கு, இலங்கையில் நடைமுறையில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள், தனிநபர்கள், தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், சமூகக் குழுக்கள், அரசு சாரா நிறுவனங்கள், ஆய்வாளர்கள் மற்றும் பல்வேறு துறை நிபுணர்களால் உருவாக்கப்பட்ட குழுக்கள் கூட விண்ணப்பிக்கலாம்.
ஜெஃப்ரி பாவா மூனாமல் விருதுக்குத் தகுதிபெறும் திட்டங்கள் கடந்த பத்து ஆண்டுகளுக்குள் செயல்படுத்தப்பட்டு குறைந்தது ஒரு வருடமாவது நிறைவடைந்திருக்க வேண்டும். மேலும், மனிதர்கள் மற்றும் சுற்றுச்சூழல் தேவைகளை ஒருங்கிணைத்தல், சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைத்தல் மற்றும் சமூகங்களை ஒன்றிணைத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் திட்டங்கள் மதிப்பீடு செய்யப்படும். சாத்தியமான திட்டங்களில் வடிவமைப்பு மூலம் சீரழிந்த நிலப்பரப்புகள் அல்லது நீர்வழிகளை மீட்டெடுப்பது, பல்லுயிர்-உணர்திறன் கொண்ட கட்டிடங்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் (biodiversity- sensitive buildings and infrastructure), தற்போதுள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளைச் சுற்றி வடிவமைக்கப்பட்ட பொது இடங்கள், வாழ்விட இழப்பு அல்லது மண் அரிப்புக்கு எதிரான சமூகத்தின் தலைமையிலான தீர்வுகள், மற்றும் பிற உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் அதிக இணக்கத்தை நோக்கி கட்டட சூழல்களின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தை வழிநடத்தும் கொள்கைகள் ஆகியவை அடங்கும். வலுவான விண்ணப்பங்கள் அந்த இடத்தின் புவியியல், நீரியல் (hydrology), தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் சமூகப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்; மேலும் இத்தகைய தலையீடுகள் திட்டத்திற்கு முந்தைய ஆரம்ப நிலையை விட (pre-project baseline) தற்போதைய நிலைமைகளை மேம்படுத்தியுள்ளன என்பதற்கான ஆதாரங்களை வழங்க வேண்டும்.
விண்ணப்பங்கள் கோரப்பட்டிருப்பது குறித்து, சுற்றுச்சூழல் ஆர்வலரும், Preserving Land and Nature (PLANT) அமைப்பின் தலைவரும், மூனாமல் விருது வழிகாட்டுட்டுக் குழுவின் உறுப்பினருமான ஸ்ரீயான் டி சில்வா விஜேயரத்ன கூறுகையில்: “சுற்றுச்சூழல் சகவாழ்வு (ecological coexistence) என்பதை வெறும் விருப்பமாக மட்டும் வைத்திருக்காமல், அதனை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ள திட்டங்களையே மூனாமல் விருது தேடுகிறது. நிலப்பரப்பின் தேவைகளை உணர்ந்து, உள்ளூர் யதார்த்தங்களுக்கு ஏற்பச் செயல்பட்டு, வெவ்வேறு சமூகங்களையும் துறைகளையும் ஒன்றிணைக்கும் பணிகளை நாங்கள் காண விரும்புகிறோம். ஒரு திட்டத்தின் அளவை விட, அதன் சிந்தனைத் தெளிவு, நேர்மறையான மாற்றத்திற்கான சான்றுகள் மற்றும் எதிர்காலத்திற்கான வடிவமைப்பை இலங்கை எவ்வாறு திட்டமிட வேண்டும் என்பதற்கு வழிகாட்டும் திறன் ஆகியவையே மிக முக்கியமானவை ஆகும்” என தெரிவித்தார்.
இலங்கை நிலப்பரப்பு கட்டிடக் கலைஞர்கள் நிறுவனம் (SLILA) மற்றும் இலங்கை பொறியியலாளர்கள் நிறுவனம் (IESL) ஆகிய இரண்டு முன்னணி தொழில்முறை அமைப்புகளும், மூனமல் விருதுக்கு (Moonamal Award) ‘ஆதரவளிக்கும் நிறுவனங்களாகப்’ பங்காளியாக இணைந்துள்ளன. இவை தங்களது நிபுணத்துவம், நம்பகத்தன்மை மற்றும் தொழில்முறை தொடர்புகளை இந்த முயற்சிக்கு வழங்குகின்றன. இந்த இரு முன்னணி அமைப்புகளின் ஆதரவானது, விருதின் செய்தியைப் பரவலாக்கவும், விண்ணப்பங்களை ஊக்குவிக்கவும் மற்றும் அதன் திட்டங்களில் பரந்த ஈடுபாட்டை ஏற்படுத்தவும் உதவுவதுடன், மூனாமல் விருதை பல்வேறு தொழில் வல்லுநர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் பரந்த அளவில் இணைக்கும்.
இலங்கை பொறியியலாளர்கள் நிறுவனத்தின் (IESL) தலைவர் கோசல கம்புரதெனிய, ஜெஃப்ரி பாவா மூனாமல் விருதுடன் தங்கள் நிறுவனம் இணைவது மனித தேவைகள் மற்றும் இயற்கையைப் பாதுகாப்பதற்கான ஒரு கூட்டு அர்ப்பணிப்பைக் குறிக்கிறது என்று தெரிவித்துள்ளார். நாட்டின் நிலையான வளர்ச்சிக்கும் நெகிழ்வுத்திறனுக்கும் மேம்பாடும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் கைகோர்த்துச் செல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வை பொறியியல் துறையினரிடையே இந்த விருது ஏற்படுத்தும். மேலும் விவரங்களை அறிந்து கொள்ள இலங்கை பொறியியலாளர்கள் நிறுவனம் (IESL) இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பங்களை 2026 ஆகஸ்ட் 31 முதல் 2027 ஜனவரி 15 வரை சிங்களம், தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் இணையவழியாகச் (online) சமர்ப்பிக்கலாம். வெற்றிபெறும் திட்டம் மற்றும் பொதுக் கொள்கைத் தீர்வுக்கு ஒரு ஆய்வுதவித் தொகை (fellowship) வழங்கப்படுவதுடன், தங்களது கற்றல், கருத்துப் பரிமாற்றம் மற்றும் பொது மக்கள் ஈடுபாட்டை மேலும் மேம்படுத்துவதற்கான தேசிய மற்றும் பிராந்திய அளவிலான கூட்டு வாய்ப்புகளும் வழங்கப்படும். இதற்கான இறுதிப் பட்டியலும் (shortlist) வெற்றியாளரும் 2027 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்ப வழிகாட்டுதல்கள் மற்றும் சமர்ப்பிப்புகளுக்கு geoffreybawaawards.com என்ற இணையதளத்தைப் பார்வையிடவும். இது தொடர்பான விசாரணைகளை awards@geoffreybawa.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.



























